அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி,
'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;
___/\___
அர்ஜுனுக்கு
'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்...
கங்கா!
___/\___
"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"
மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.
பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.
___/\___
சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது.
"ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"
இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"
___/\___
ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.
ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.
___/\___
சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு
cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை
tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.
அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:
"சைடு "
பார்" என்பதால்
காக்டெயிலா?"
___/\___