Showing posts with label இட்லிவடை. Show all posts
Showing posts with label இட்லிவடை. Show all posts

Friday, 21 January 2011

IPL

ஐபிஎல் ஏலம் குறித்த எனது பதிவு இட்லிவடையில் வெளியானது.


படிக்க இங்கே கிளிக்கவும்.

Monday, 7 June 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:

ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.

கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முஸ்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.

ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.

இட்லிவடையில் வெளியானது.

Sunday, 28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.
அதையும் விட, வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.

தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயகர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.

அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்? -"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.

-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக
மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.

-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில்
ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.

சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?

நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.

த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய
இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான
காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி
இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?

ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.

பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.

காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.

காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா,வேட்டையாடு ஜோ(?) என்று
தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று
நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

My Verdict: Visual/Musical treat, served with lots of love.

இட்லிவடையில் வெளியானது.

Wednesday, 24 February 2010

Rocket Singh


ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"



நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.

"இந்த படத்தில் கதை தான் ஹீரோ. அப்போ ஹீரோயின்? அது திரைக்கதை. தமிழில் ஏன் இப்படி படங்கள் வருவதில்லை? opening song , குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோ என்று சாவடிக்கிறார்கள்.Rocket Singh மிஸ் பண்ண கூடாத படம். கண்டிப்பா அதும் தியேட்டரில் போய் பாருங்க. " என்று தமிழ் திரைப்பட ஆர்வலர்களை எல்லாம் புலம்ப வைக்கும் படம் அல்ல இது. மற்றபடி குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையில் பிசியா இருக்க, குழந்தையும் தூங்கி விட, உலக தொலைக்காட்சிகள் எதிலும் ஏதும் உருப்படியா தேறாத நிலையில், நீங்கள் என்ன செய்வது என்று திரு திருன்னு முழித்து கொண்டு இருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தை கண்டிப்பாக சுவாரஸ்யம் ஆக்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.

ஹர்ப்ரீத் சிங் பேடி. 38 % மார்க் வாங்கி Bcom பாஸ் செய்து விட்டு "AYS " என்ற கம்ப்யூட்டர் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மானாக சேர்கிறார். பொதுவாக சேல்ஸ்மென்களுக்கு இருக்க வேண்டியதாக நம்பப்படும் எந்த நாசுக்குகளும் தெரியாததால், கம்பெனியில் ஜோக்கராக ஆக்க படுகிறார். நொந்து போன நிலையில் இருப்பவருக்கு சில உதவிகளோடு, சில புள்ளிவிவரங்களும் கிடைக்கவே சுதாரித்துக்கொள்கிறார். AYS உள்ளேயே இருந்து கொண்டு, "Rocket Sales corporation" என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் தொடங்குகிறது இவரது computer sales தனி(உள்)குடித்தனம்.அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. Rocket sales க்கு சில ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவருக்கு உதவி தேவைப்படுகிறது.  AYS இல் பணி புரிபவர்களில் நால்வரை அவர்களின் நிறை, குறை, தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களை அணுகி தன் Rocket குடித்தனத்தில் சேர்த்து கொள்கிறார்.சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண/சர்வீஸ் பண்ண - சர்வீஸ் மேனேஜர் கிரி, கம்ப்யூட்டர் assemble பண்ண - பியூன் மிஸ்ரா, customer calls answer/transfer பண்ண - டெலிபோன் ஆப்பரேட்டர் Koyna, மார்க்கெட்டிங் பண்ண - சேல்ஸ் மேனேஜர் நிதின்.

Strategic ஆக சில வேலைகளை செய்து ராப்பகலாக உழைத்து காசு பார்க்கிறார்கள்.சேல்சோடு சேல்சாக ஹர்ப்ரீத்துக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைக்கிறாள். ஒரு நாள் AYS இன் MD "Mr .Puri"யிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹர்ப்ரீத்தாக ரன்பீர் கபூர். "Ranbir Kapoor dating Katrina Kaif", "Deepika Padukone and Ranbir Kapoor - Chal Kya raha hai?" என்று ஸ்கூப்கள் படித்து இருக்கிறேனே தவிர இவருடைய படம் நான் பார்ப்பது இதான் முதல் முறை. சர்தார் வேடம் நன்றாக பொருந்துகிறது. சில முக பாவனைகள் பரவாயில்லை. இவரை தவிர படத்தில் நடித்த யாருடைய பெயரும் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாருமே அவரவர் பாத்திரத்தை தெளிவாக செய்கிறார்கள்.

நம்ம ஊரு படங்கள் மாதிரி குப்பத்து ஹீரோ, குப்பை தொட்டியில் போடப்பட்ட ஹீரோ, ரவுடி ஹீரோ என்று இல்லாமல் பெரும்பாலான ஹிந்தி படங்களில் ஹீரோ ரொம்ப attitude, positive thinking என்று சற்று extreme ஆக இருப்பார். இங்கயும் அப்படியே. AYS கம்பெனி பிரிண்டர், கரன்ட், டெலிபோன் எல்லாவற்றையும் உபயோக்கித்து கொள்வதற்கு, கணக்கு வைத்துக்கொள்கிறான் ஹர்ப்ரீத். என்றாவது ஒரு நாள் AYS க்கு அதை எல்லாம் செட்டில் பண்ணி விட வேண்டும் என்று சொல்கிறான். "Noone is an employee, all are partners" என்று சொல்லி ஐவருக்கும் லாபத்தை பகிர்ந்து தருகிறான். எல்லாரையும் பேசி பேசியே கரெக்ட் பண்றான்.Optimism overdosed.

தனி காமெடி ட்ராக் எல்லாம் கிடையாது. வசனங்களை பேஸ் பண்ணி அங்கங்கே மெல்லிய புன்னகைய வரவழைக்கும் அளவான காமெடி தான். சில வசனங்களும் நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ஹர்ப்ரீத்தின் தாத்தா, "உன்னை நான் எந்த திருட்டு தனமும் சொல்லி கொடுத்து வளர்க்கலையே? ஆனா நீ இப்படி திருடனா வந்து நிக்கறியே?" என்று சொல்லவும், அதற்கு ஹர்ப்ரீத் "அன்றைக்கே திருட்டுத்தனம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தால் நான் இப்படி திருடனாகும் நிலைமை வந்துருக்காது" என்பதும்.

பாடல்கள், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் என்றெல்லாம் எழுத படத்தில் இவை எதுவும் கிடையாது. அதனால் படம் பார்க்கும் போது ஒரு நாவல் படிப்பதை போன்ற உணர்வு தான் எழும். ஆனால் ஓரளவுக்கு விறுவிறுப்பான நாவல். அதிலும் இந்த ஐவரும் என்றோ ஒரு நாள் எப்படியோ மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று படம் பார்ப்பவர்கள் யூகித்து விடுவார்கள். அது எப்போ, எப்படி என்று நம்மை சற்று பதற்ற படுத்தும் வகையில் காட்சி அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.


இப்படிப்பட்ட படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுதல் நலம். ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதால், பாதி படம் பார்த்து கொண்டிருக்கும் போது "அம்மா" என்று முழித்து அழும் குழந்தையின் சத்தம், "அடடா, முக்கியமா சீன் பிரேக் ஆகுதே" என்ற உணர்வுக்கு பதிலாக, "Ok,let me have a break and come back" என்று தோன்ற வைக்கிறது.

நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிய ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனி தான் infosys என்ற விஸ்வரூபம் எடுத்தது என்பதை நினைக்கையில், இட்லிவடை பார்க்க சொல்லி ரெகமன்ட் செய்த இந்த படத்தில், நடக்க முடியாத எதையும் சொல்லி விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


My verdict: Watchable, Once.

இட்லிவடையில் வெளியானது. 

Thursday, 7 January 2010

2 States வாசிப்பு அனுபவம்




'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை.

"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க.

சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?

"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough"
இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:
பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.

இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள்.

காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது.

Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"
கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது.
Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்.
அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.
"he asked if I am pure?"
அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".

"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.

கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார்.

தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".

"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.

பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.

IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.

"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்?

My verdict: Expectations partially met.

இட்லிவடையில் வெளியானது.
 இட்லிவடைக்கு நன்றி.

Thursday, 10 December 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன்


சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகததை பற்றிய எனது கருத்துகள் இட்லிவடையில் வெளிவந்துள்ளது.
வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.

Tuesday, 27 October 2009

இட்லிவடைக்கு ஆறு வயது.

கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது.

"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்." என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.

இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,போன வருட பதிவையும், இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது.

இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)

Thursday, 23 October 2008

Long live இட்லிவடை!!!

நான் follow பண்ற பதிவுகளில் முதலிடத்தில் இருக்கும் இட்லிவடைக்கு வெற்றிகரமான ஐந்தாண்டு நிறைவு...
அதை முன்னிட்டு நான் அவங்களைப் பத்தி என்ன நெனைக்குறேன்னு கேட்டாங்க....நம்மளை மதிச்சு கேக்குறாங்களேன்னு நானும் கடகடன்னு எழுதி குடுத்துட்டேன்...
என்ன எழுதினேன்னு பாக்க இங்க போங்க.