நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"
___/\___
மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.
"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.
மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...
இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.
சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.
___/\___
அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.
கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.
இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.
'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.
___/\___
அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?
நான் பெரிய கிரிக்கெட் ரசிகை கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.
CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?
எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
___/\___
காற்று வாங்கப் போனேன்… (1)
12 years ago
