Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Thursday, 30 December 2010

ஒரு இடம், ஒரு படம், சில புத்தகங்கள்

சென்ற மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு எங்காவது போய் வரலாம், என்று பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வேலூருக்கு சற்று முன் இருக்கும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு( வேலூர் பொற்கோவில்) சென்றோம்.அன்று இரவே வெகு உத்வேகத்துடன் ஒரு பதிவை ஆரம்பித்து சிறிது எழுதி, பிறகு இதை எழுத கூடாது, அதை எழுத கூடாது என்று அழித்து கடைசியாக ஒரு எம்ட்டி பைல் டெஸ்க்டாப்பில் ஒரு மாதமாக தூங்குகிறது. இப்போது எல்லாம் மறந்து நினைவில் இருப்பது இரண்டே விஷயங்கள். ஒன்று அவ்வளவு பெரிய இடத்தின் சுத்தமும், நேர்த்தியான பராமரிப்பும். இன்னொன்று கியூவில் போய் கொண்டு இருக்கும் போது முன்னால் இருந்த இரு பையன்கள். பெங்களூர் போலும். "இவ்வளவு பெரிய இடம் பெங்களூரில் கிடைத்து இருந்தால் டெக் பார்க் கட்டிருப்பாங்கடா, இங்கனால கோயில் கட்டிட்டாங்க' ன்னு பேசிக்கொண்டார்கள்.

---000---

மன்மதன் அம்பு.

பதிவில் இந்த இடம் வந்ததும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக pause. Sigh. Sniff.

தசாவதாரத்தில் ஒரு சீனில் பாட்டி பீரோக்குள் பூட்டி கொள்வார். வெளியில் இருந்து தட்டி அசின், "பாட்டி சித்த வெளிய வரேளா?" என்பார்.

பாட்டி: மாட்டேன், அந்த கட்டால போறவன் அங்கே தான் இருக்கானா?

அசின்: எந்த கட்டால போறவன்? இங்க நெறைய பேர் இருக்கா!

உன்னை போல் ஒருவன்
கமல்: எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனா அது எழுதுறதுல மட்டும்.

இப்படி சொந்த கருத்துக்களை (அடுத்தவன் காசுல) வசனமா எழுதி பார்க்கும் கமல் இந்த படத்தில் சற்று அதிகமே கடுப்பேத்துகிறார்.

ஹம்மரில் வாதிட்டு கொண்டே செல்லும் த்ரிஷாவும் மாதவனும் பேசிக்கொள்ளும் அதிமேதாவித்தனமான வசனங்களை சொல்வதா, சொந்த குரலில் தமிழ் பேசி நடித்து விட்டதற்காகவே "தமிழ் கவிதையால் தான் நாக்கு வழிக்கிறேன்" என்று த்ரிஷா பேசும் அமெச்சூர் வசனத்தை சொல்வதா, Matrimony/Alimony என்று சங்கீதாவின் வசனத்தை சொல்வதா...மாதவன் ஒரு இடத்தில் 'kyonki mere paas maa hai"என்று ஹிந்தியில் வேறு பேசுகிறார். இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. எங்கென்று தான் நினைவு வரவில்லை.

சென்னையை தாண்டி செங்கல்பட்டு வந்துட்டாலே இந்த வசனங்களை புரிந்து கொள்வதெல்லாம் சிரமம். எங்க ஊருகாரங்களை எல்லாம் நினைத்து பாருங்கள். சென்னையில் இருந்து நானூறு கிலோமீட்டர். வெறுமே கப்பல் பார்க்க எல்லாரும் படத்துக்கு வருவார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

பஞ்ச தந்திரத்தில் ஒரு சீனில் குடித்து விட்டு சிம்ரன் வீட்டின் சுவரேறி குதிப்பார். "யாராவது பாத்துட்டாங்கன்னா என் துப்பில மூஞ்சிடுவாங்க" ம்பார். அதுக்கு தியேட்டரில் எல்லாரும் சிரிச்சாங்கன்னு இந்த படத்துல மாதவனை படம் முழுக்க தண்ணி போட்டுட்டு அதே மாறி பேச வச்சுருக்கார். என்ன கொடுமை இது உ.நா?

ஒரு நடிகராக கமலஹாசனின் ரசிகை தான் நானும். ஆனால் இந்த படத்தில் அவர் பண்ற எல்லா வித்தைகளையும் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் ட்ராக்கில் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தசாவாதரத்தில் கிருஷ்ணவேணி பாட்டியையும் ஆராவமுதனையும் லிங்க் பண்ணிய அதே திரைக்கதை ஆசிரியரா இந்த கிளைமாக்ஸ் பண்ணியது?
What happened to Kamal? Is he too tired just as he looks in the movie?

 சரி அக்கட பூமியில் எப்படி ஓடுகிறது என்ற அக்கறையில் எங்க டீமில் இருக்கும் ஒரு அண்ணையாவிடம் "மன்மத பானம் எலா ச்சேஸ்துந்தி மீ வூருலோ?  என்றால் அவர், "மன்மத பானம்னி ஒத்துலேயி, மொன்ன மருத நாயகமணி வொக்க பிலிம் பூஜ ச்சேஸாரே மீ   கமலஹாசனு...அதி ஏமாயிந்தி? ன்னார். History is always remembered.


---000---

கடந்த இரண்டு மாதங்களில் அசோகமித்ரனின் மானசரோவர், சுஜாதாவின் நைலான் கயிறு,சிவந்த கைகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, 
மற்றும் சில சிறுகதைகள் படித்தேன்.

நைலான் கயிறு தான் சுஜாதாவின் முதல் நாவலாமே? என் இனிய இயந்திரா, எந்திரனாகி இருக்கிறது.அதிலும் மீண்டும் ஜீனோ கடைசி காட்சியில் பார்ட் பார்ட்டாக கழண்டு போன ஜீனோவை மியூசியத்தில் போய் காட்சி பொருளாக வரிசையில் நின்று பார்ப்பார்கள்..:-) Same blood.

கல்லூரி ஹாஸ்டலில் நிறைய பெண்கள் மில்ஸ் அண்ட் பூன் என்று பேசிக் கொள்வார்கள். நானும் அது ஒரு எழுத்தாளர் பெயர் என்றே வெகு நாட்கள் நினைத்து இருந்தேன்.பிறகு தான் தெரிந்தது.அது ஒரு பதிப்பகம். நானும் வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மில்ஸ் அண்ட் பூன் படித்தேன். பிறகு இன்னும் சிலவற்றை கதை சுருக்கம் மட்டும் வாசித்தேன். எல்லாம் ஒரே டெம்ப்ளேட். ஒரு பணக்கார ஆண், அவனுடன் கமிட் ஆன ஆனால் காதல் இல்லாத ஒரு திமிர் பிடித்த பெண், இன்னொரு அழகான பெண் ஆனால் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போன, கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். நடுவில் இருக்கும் பெண்ணை கழற்றி விட்டு இவர்கள் இருவரும் சேர்வார்கள். எங்கேயோ படித்த மாதிரி இருக்குமே? ஆமாம், அதே ரமணிச்சந்திரன் டெம்ப்ளேட் தான். தமிழில் இவர் என்றால் ஆங்கிலத்தில் 'மி அ பூ' போலும். ஆளை விடுங்கப்பா என்று மூடி வைத்து விட்டேன்.

---000---

டிவிட்டர் நிறைய பேருக்கு செல்ல பிள்ளையான பிறகு ப்ளாக்ஸ்பாட் எடுப்பார் கைபிள்ளை ஆகி போனது தெரிந்த விஷயம்.நானும் இருக்கிறேன் டிவிட்டரில்(@priyakathiravan).

( ஆ. ராசா ஹாஸ்பிடலில் சேர்ந்தது மாதிரியான) செய்திகளை சுட சுட தருவதோடு, சுவாரஸ்யமான லிங்குகள், படங்கள், பொன்மொழிகள், பிரபல பதிவர்களின் பொது அரட்டை என்று டிவிட்டர் ஒரு நல்ல பொழுது போக்கு களம்.  'வெறும் நூத்தி நாப்பது தான். அதுக்குள்ள சொல்ல வந்ததை நச்ச்சுன்னு சொல்லு' என்று டிவிட்டர் வைக்கும் சேலஞ்சை நீந்தி கடப்பவர்கள் சாமர்த்திய சாலிகள்.இங்கே மட்டைக்கெல்லாம் மதிப்பில்லை 20-20 மாதிரி அதிரடியாக ஆட வேண்டும்.'மழைக்கும் பனிக்கும் இடையேயான ஏதோ ஒன்றில் நனைந்து கொண்டே ஆபீஸ் வந்தேன்' என்று சொன்னால் ஒருத்தர் சீண்ட மாட்டார்கள். அதே "பெங்களூர் கிளைமேட் செம மப்பில் இருக்கிறது" என்று சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும். Learning yet.

 சமீபத்தில் எனது பேவரிட்டில் இடம் பிடித்த ட்வீட்.


என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.(@writemugil)

யாரையாவது பாலோ பண்ணினால் சிரத்தையாக "So and so is following you in twitter" என்று மெயில் அனுப்பும் ட்விட்டர், unfollow பண்ணால் சமர்த்தாக அதை அவர்களுக்கு சொல்லாதாம்.  Suweet.
---000---


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wishing each of you a healthy, happy and peaceful 2010.

---/\---

Tuesday, 19 October 2010

2 states on screen soon

த்ரீ இடியட்சை அடுத்து, 2states படமாக போகிறதாம்.


க்ரிஷ் ஆக சாயிப் அலி கான், அனன்யாவாக ப்ரியங்கா சோப்ரா.

க்ரிஷ், அனன்யாவின் அம்மாக்கள் பாத்திரங்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று டுவீட்டி இருக்கிறார் சேதன் பகத். (twitter@chetan_bhagat)
 
Any suggestions? அவருக்கு டிவீட்டுவதோடு,  இங்கயும் சொல்லவும் :-)

Wednesday, 21 April 2010

ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்பு

நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"

___/\___

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...

இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.


சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.

___/\___

அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.

கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.

'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.

___/\___

அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?

நான் பெரிய கிரிக்கெட் ரசிகை  கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.

CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?

எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


___/\___

Wednesday, 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

Monday, 29 March 2010

Potpourri

Potpourri ன்னா என்ன?

"Assorted Collection" ன்னு அர்த்தம். கிட்டத்தட்ட நம்ம அஞ்சறைப்பெட்டி
மாதிரி.பெரிய gift shops க்கு சென்றோம் என்றால், காய்ந்து போன, வாசனை நிறைந்த பூ இதழ்கள், பழ தோல்கள் எல்லாம் ஒரு transparent பெட்டியில் போட்டு, அதுக்கு ஒரு கலர் ரிப்பன் கட்டி யானை விலை ஒட்டி வைத்து இருப்பார்கள். அதற்கு potpourri என்று பெயர். பல பாடல்களில் இருந்து சில சில பகுதிகளை எடுத்து அதையே ஒரு தொடர் பாடலாக அமைப்பதை 'medley' என்று சொல்வார்கள். இதுவும் கூட ஒரு வகையில் potpourri தான். 'T' சைலன்ட்டாக 'powpuree' என்று உச்சரிக்க வேண்டுமாம். சரி நான் ஏன் இதை பற்றி இப்போ சொல்கிறேன்?

எங்கள் அலுவலகத்தில் ஒரு 'intranet' மாத இதழ் துவங்கி இருக்கிறார்கள்.
அதற்கு 'Potpourri' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த மாதம் தான் முதல் edition.
மார்ச் மாத துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது.

"புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், பயணக்கட்டுரை என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி...."

புத்தக விமர்சனம் என்றதும் மனசுக்குள் ஒரு bulb மையம் கொண்டது.  இட்லிவடைக்கு தமிழில் எழுதிய "2 States" விமர்சனத்தை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பி வைத்தேன்.

"நல்லா இருக்கு, shortlisted .ஆனால் ரொம்ப பெரிசா இருக்கு. எங்களுக்கு
350 வார்த்தைகளுக்குள் சுருக்கி அனுப்பவும்" என்று பதில் வந்தது.

எனது கட்டுரை 850 வார்த்தைகள்.

ஐநூறு வார்த்தைகளை வெட்டனுமா? அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று முழித்த சமயத்தில் தான் ஞாபகம் வந்தது. கலைஞர் டிவி புகழ் எழுத்தாளர் முதன்மை துணை எடிட்டர் ஆச்சே? கையில் வெண்ணையை வைத்து கொண்டு....

"எண்ணூத்தி அம்பதை முன்னூத்தி அம்பதாக்கணும். முடியுமா?"

"இதெல்லாம் எனக்கு சாம்கோவில் முட்டை பொரியல் தூவின மொகல் மட்டன் பிரியாணி சாப்பிடற மாதிரி, அனுப்புங்க"

அனுப்பிச்ச முப்பதே நிமிஷத்தில் முன்னூத்தம்பதா இளைத்து வந்தது 2 ஸ்டேட்ஸ்.

அதுக்கு கொஞ்சம் அப்டி இப்டி தூசு தட்டி, Potpourri குழுவிற்கு அனுப்பிச்சேன். இந்த மாத இதழில் பிரசுரமானது.

உங்கள் பார்வைக்கு இதோ:

A WEEKEND READ – Two States

Chetan Bhaghat’s best seller ‘2 states’ has a historical record, For the first time in the history of books this book is dedicated to my in-laws*, which does not mean I am not henpecked/under her thumb or not man enough. So you guess what is it going to be and your guess is intact.

Punjabi Krish and Tamil Ananya fall in love and their parents (of course) would not agree. Like our movie heroes, Chetan impresses Ananya's family. And Ananya flatters Chetan's mother. However, the families dislike each other and the lovers depart. But in the climax ‘All izzz well'.

It is the simplicity of the novel, which appeals. But it’s too simple, to make us realize that it’s in English.

Chetan criticized Tamilians for their idly, sambar, curd rice, RajiniKanth and what not? With a disclaimer that, “we only make fun of people we care for”. And it’s no less when he countered Punjabis' love for dairy products, marble flooring, dowry etc.

Watch out when you read this book in public, as it makes you laugh out louder. Chetan's sense of humor is brilliant! For instance, Ananya tells Krish that a guy had come to meet her, who was preferred by her parents to tie the knots for her, and he asked about her virginity.

"Krish, he asked if I am pure or something..."
"What is he looking for? Ghee?

Chetan says though it’s his own story, there is a lot of fiction in it. Perhaps (?) there is. He tries to emphasize that "The lingual/cultural/regional differences between two states would not only result in clashes for water, electricity and line of control but could also put someone's love life in a mishap". But given the current trend in India of making more states out of the existing, I am not sure how many of us will actually get the message?

My verdict: Set your expectations low; Pass time!

ஏங்க? எல்லாரும் மீள்பதிவு போடறாங்க. நான் மொழிபெயர்ப்பு பதிவு தான போட்ருக்கேன். அதுக்கே மொறச்சா எப்டி?

Thursday, 7 January 2010

2 States வாசிப்பு அனுபவம்




'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை.

"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க.

சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?

"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough"
இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:
பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.

இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள்.

காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது.

Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"
கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது.
Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்.
அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.
"he asked if I am pure?"
அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".

"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.

கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார்.

தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".

"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.

பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.

IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.

"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்?

My verdict: Expectations partially met.

இட்லிவடையில் வெளியானது.
 இட்லிவடைக்கு நன்றி.

Friday, 1 January 2010

என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.



தமிழ் இணையம் அப்போது தான் எனக்கு அறிமுகம். இரண்டரை வருடங்கள் இருக்கும்.ஒரு மதிய நேர 'மரத்தடி' வாசிப்பின் போது கண்ணில் பட்டது தான் 'என் செல்ல செல்வங்கள்' தொடர்.

அண்ணனும் தங்கையுமாக சேர்ந்து ரெண்டு வாத்து குஞ்சுகளை அண்டா தண்ணில நீச்சல் அடிக்க விட்டுட்டு அடுத்த வீட்டுக்கு போய்டுவாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ, நீந்தி நீந்தி களைப்பான வாத்துகள், தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டு இருக்கும். இதான் முதல் அத்தியாயம். "சோகத்தை கூட சுவையாக சொல்ல முடிந்து இருக்கிறதே" இந்த எண்ணத்துடன் தொடர்ந்தேன். பத்தொன்பது அத்தியாயங்கள். வளர்ப்பு பிராணிகள் பற்றிய நெகிழ வைக்கும் தொடர்.நடுவில் தண்ணீர் குடிக்க கூட எழுந்திரிக்க வில்லை. "கப்புவின் கடைசி நாட்கள்" படித்து முடித்து நிமிர்ந்த போது வெளியில் இருட்டு, உள்ளே கனம். சாப்பிட தோன்ற வில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தவள் தான். கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நிறைவான உணர்வு. எங்கள் வீட்டில் எங்களுடன் வளர்ந்த ஜூலி, ஜானி, பப்பி , ப்ளாக்கி எல்லாரும் கனவில் வந்து போனார்கள்.

ஒரு நாய் பூனை கதைக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான்.
-முதலாவதாக செல்ல பிராணிகள் நமது குழந்தைகள் போல தான். அன்பு செலுத்துவதற்கு, அதற்கும் மேலாக அன்பை பெறுவதற்கு, இதை விட ஒரு எளிய வழி இருக்க முடியாது.
-அதை விட முக்கியம். தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, வளர்ப்பு பிராணிகள் தான் ஆறுதலாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக, 'என் செல்ல செல்வங்கள்' வளர்ப்பு பிராணிகள் பற்றிய ஒரு தொடர் மட்டும் அல்ல."பிராணி விரும்பிகளுக்கும்,வெட்னரி டாக்டர்களுக்குமானது,not my kind" என்று நினைத்து விட வேண்டாம்.

தொடரை ஊன்றி படித்தவர்கள் இதை கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் மிக சாதாரணமான நிலையில் இருந்த ஒரு குடும்பம், படிப்படியாக எப்படி ஒரு சமூக அந்தஸ்த்தை அடைகிறது என்று, டைரக்டர் விக்ரமன் ஒரே பாட்டுக்குள் அடைத்து விடும் விஷயம், இந்த செல்லங்கள் தொடரில், subtle ஆக சொல்ல பட்டு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாடகை வீடு மாற்றுவதையே ஏதோ அடுத்த ஊருக்கு ஒரு நாள் பயணம் செல்வது போல, சாவகாசமாக செய்ய முடிந்த அளவில் மட்டுமே பொருட்கள் வைத்து இருக்கும் ஒரு எளிய குடும்பம், தொடரின் முடிவில் நியூசிலாந்தில் சொந்த வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம், காரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருப்பார்கள்.

துளசி கோபால்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...ன்னு ஒரு பாட்டு இருக்கு.அது மாதிரி வலையுலகத்தில் டீச்சர் யாருன்னு கேட்டு பாருங்க. இவங்க தான். இவர்களுடைய பயணக் கட்டுரைகளும், புராணக்கதைகளை எளிமையாக சொல்லும் விதமும் மிகவும் பிரபலம்.1000 பதிவுகளை அனாயாசமாக தொட போகிறவர்."தேவதை" இதழில், "பெரிய மனசு, பெரிய மனுஷர்" என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய கட்டுரை சமீபத்தில் வெளியாகியது.இவர்களுடைய பதிவுகளில் எளிமை இருக்கும். "Woman next door" இமேஜ் இருக்கும். அழகான புகைப்படங்கள் இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும். செல்ல செல்வங்கள் தொடரிலும் இவை அனைத்தும் உண்டு.

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இவங்களுக்கு வண்ணத்து பூச்சி விருது கொடுத்தப்போ, இவங்களை பத்தி எழுதின நாலு வரிகள்:
"சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்."

விஷயத்துக்கு வரேன். துளசி கோபால் எழுதிய 'என் செல்ல செல்வங்கள்' தொடர் புத்தகமாக வெளிவருகிறது. இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். சந்தியா பதிப்பகம்.

தொடரை படித்து இரு வருடங்களுக்கு பிறகு, எதேச்சையாக இவர்களுடைய அறிமுகம் கிடைக்க போக, இவர்களுக்கு ஒரு மெயில் தட்டினேன். "உங்கள் செல்லங்கள் பத்தொன்பதையும் ஒரே நாளில் படித்து, மூன்று நாட்கள் கப்புவை நினைத்து அழுதவள் நான். இப்போதும் அந்த கடைசி எபிசோடை நினைத்தாலே மனசு கனத்து போய் விடும் எனக்கு. செல்லங்களை நான் உங்கள் செல்ல குழந்தைகள் பற்றிய தொடராக மட்டும் பார்க்க வில்லை. வாழ்க்கையின் மிக சாதாரண நிலையில் இருந்து, படிப்படியாக நீங்க உயர்ந்துள்ள நிலையை நீங்கள் எவ்ளோ எளிமையாக, எங்களுக்கு உணர்த்தி இருந்தீர்கள்"என்று நான் அனுப்பி இருந்த மடலை புத்தகத்தின் முன்னுரையில் சுட்டி இருப்பதில் மகிழ்ச்சி. "புதிய பார்வை" இதழில், புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். தன்னுடைய வலைப்பதிவில் ஸ்கேன் பண்ணி போட்டு இருக்கிறார்.பாருங்கள்.

My verdict: Pets and BEYOND.

Thursday, 10 December 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன்


சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகததை பற்றிய எனது கருத்துகள் இட்லிவடையில் வெளிவந்துள்ளது.
வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.

Wednesday, 11 November 2009

ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.

இது ஒரு time-pass பதி(கிர்)வு.
******************************
சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.

"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.

"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."

நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.

*******************************
கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.
'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.

*****************
Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)
Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.

*****************************
பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.
கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.

*******************************

With that, wishing each of you to have happy and happening pass time.

Monday, 12 January 2009

கருவாச்சியும் நானும்!!!

கல்லூரியில் படிக்கற வரைக்கும் ஏதாவது புத்தகத்தைப் பாத்தா போதும், அத கைல எடுத்துட்டா சாப்பாடு வேணாம், தண்ணி வேணாம், தூக்கம் வேணாம், டிவி வேணவே வேணாம்.....அந்த புத்தகத்தை கடைசி வரைக்கும் படிச்சு முடிச்சுட்டா தான் 'ஜென்ம சாபல்யம்' அடைஞ்ச மாறி இருக்கும்....அதுக்கு அப்றோம் அவ்ளோ வெறியோட படிக்குறது கொறஞ்சுடுச்சு....நண்பர்கள் ரொம்ப ரொம்ப recommend பண்ற புத்தகங்கள் மட்டும் என்கிற அளவில் என்னுடைய புத்தக உலகம் சுருங்கி தான் போனது....'நேரம் இல்லை' ன்னு சொன்னால் அது ஒரு சறுக்கு மட்டுமே.....நண்பர்கள் "மெயில் பண்ண... போன் பண்ண....மீட் பண்ண.... நேரம் இல்லன்னு" சொல்றப்போ எல்லாம் மனசுக்குள்ள அவங்கள வைது இருக்கேன்...."மனசு இருந்தா நேரம் எல்லாம் நம்மளா உருவாக்கிக்கலாம்" ன்னு நெனச்சு இருக்கேன்.....எனக்கும் அது பொருந்தும் தானே?அதுனால படிக்க நேரம் இல்லன்னு சொல்ல மாட்டேன், 'my prioritieis have changed ' ன்னு உண்மைய ஒத்துக்குறேன்.




இப்படியான என்னுடைய குட்டி புத்தக உலகத்துல,
இப்போ கவிஞரின் கருவாச்சி....:-)..:-(
இந்த இடத்துல நான் படிக்குறதுக்காக சிரிக்குற smiley போடனுமா இல்லாட்டி கருவாச்சி படுற பாட்டை நெனச்சு அழுவுற smiley போடணுமான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு....அதுனால ரெண்டையும் போட்டுட்டேன்.

அர்ஜுன் தூங்கின அப்றோம் நைசா எந்திருச்சு ஹால் க்கு போனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஓஓ ன்னு ஒரு அழுகை சத்தம் கேக்கும்....பயபுள்ள பக்கத்துல அம்மா இல்லன்னு எப்டித்தான் கண்டு புடிக்குறானோ.........
அவன் பக்கத்துலையே நம்ம presence ஐ feel பண்ண வெச்சுகிட்டே சின்ன லைட் வெளிச்சத்துல... அந்த லைட் வெளிச்சம் அவன் மூஞ்சிலயோ,அவங்கப்பா மூஞ்சிலயோ படாம அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டும், கம்பெனி வரப்போ போறப்போ cab லையும்.... இப்டியாக கருவாச்சியும் நானும்....

கவிஞரின் கவிதை தொகுப்புகள் எனக்கு நெறைய உதவி செஞ்சு இருக்கு....
'"இமயத்திற்கும் சரிவு உண்டு இருபுறமும்...இளைய தோழா எழுந்து வா..."
"நீ எறும்பாய் இருந்தால் என்ன? ஊர்ந்து கொண்டே இரு...இரும்பும் தேயும்...." ன்னு அவர் வரிகளை என் பள்ளி நாட்களில் பல போட்டிகளில் பயன் படுத்தி இருக்கிறேன்...
தலைவர் பாரதியும், கவிப்பேரரசும் என்னோட ஸ்கூல் competition prizes க்கு எல்லாம் ராயல்டி claim பண்ற அளவுக்கு ஆட்டம் போட்டு இருக்கேன்...:-)

தமிழ் சினிமா பாடல்களை பொறுத்த வரை ரெண்டு ரகமானவர்கள் இருக்காங்கன்னு நான் நெனைக்குறேன்....
ஒரு ரகம் வைரமுத்து ரசிகர்கள், மறுரகம் தமிழ் சினிமா பாட்டு கேட்காதவர்கள் / புரியாதவர்கள் .
உண்மையில் அவருடைய வார்த்தை விளையாடல்களுக்கு மயங்காதவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை....
எந்த ஒரு உணர்வுக்கும், உறவுக்கும் உயிரோட்டமுள்ள எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தவர். தமிழ் படித்த கவிஞரின் trendy technical language ம், ஒட்டு மொத்த காமத்துப் பாலையும் ஓரிரு வரிகளுக்குள் திணிக்க முடிந்து விடும் திறமையும் நான் மேற்கோள் காட்டி ஞாபகப் படுத்த வேண்டிய அவசியம் அவரை படிக்கும், கேட்கும் யாருக்கும் இருக்க போவதில்லை....
ஆனால் கவிஞருக்கு "சமுத்திரம் கடக்க ஆசை பட்டவன் நான்...ஒரு சிப்பிக்குள் நீச்சல் அடித்து கொண்டு இருக்கிறேன்" ன்னு தன்னுடைய தேடல் சினிமாவில் முடங்கி இருப்பதாக ஒரு குறை உண்டு....அந்த தேடலுக்கு வடிகாலாக அவருடைய படைப்புகளில் ஒரு முழுமையை கொண்டு வர முயற்சிக்கும் தீவிரம் கருவாச்சியிலும்....

தண்ணீர் தேசத்திலும், கள்ளிக்காட்டிலும் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு, அறிந்து, அனுபவித்து எழுத்தில் கொண்டு வந்தாரோ அதே மாதிரி இங்கயும் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் ஏட்டறிவை கொண்டு எழுதாமல், கண்டு கேட்டு அனுபவித்து எழுதி இருக்காரு......
கள்ளிக்காட்டில் பேயத்தேவர் ஒரு பசுவுக்கு பிரசவம் பார்க்கறப்போ, இங்க படிக்கறவங்களோட தொண்டைக்கும் வயித்துக்கும் ஏதோ ஒண்ண அடைக்க வெச்சவரு, இங்க ஒரு படி மேல போயி, கருவாச்சிய அத்துவான காட்டுல தன்னந்தனியா பிரசவிக்க விட்டு, கருவாச்சி பெத்து பொழச்சதும் படிக்குற நமக்கு வயித்துச் சுமை இறங்கிட்ட மாறி பெருமூச்சு வரவழைக்குறாறு.
கருவாச்சி கருவாட்டு கொழம்பு வைக்கும் போது நமக்கு நாக்கு ஊருது....
கருவாச்சிக்கு அவங்கம்மா உடம்பு பிடிச்சு விட, நமக்கு சொகமா இருக்கு....இப்டி காவியம் முழுக்க அவரோட ராஜ்யம்....

ஆனா அத்தியாயத்துக்கு அத்தியாயம் கருவாச்சி படும் கஷ்டங்கள் தாங்க முடியலை....பக்கம் பக்கமா அவள பாடாப்படுத்தி வெக்குறப்போ "சொல்லுங்க கவிஞரே! what next is waiting for her????" ன்னு ஒரு அலுப்பு வருது...அலுப்பு ன்னு சொல்லுறதுக்காக வைரமுத்து maniacs என்னை மன்னிக்கட்டும்....I myself is one by the way.

தமிழ் ரோஜாவையும், கலைவண்ணனையும் உயிரோட கரையேத்தி, தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்காமல், புண்ணியம் சேர்த்துக்கொண்ட கை தான், பேயத்தேவரைக் கொன்று போட்டு மொக்கராச அனாதையா ஆக்கிச்சு....கருவாச்சில இன்னும் ஒரு முப்பது பக்கம் பாக்கி இருக்கு.......என்ன பண்ண காத்துருக்காரோ கவிஞர்????