Wednesday, 22 September 2010

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்!

"What? All set to be decked up for 10 days?"

Yeah Yeah...Leaving tomorrow...planned fully...one function on saturday and one on sunday...bought a new face cream from lakme...5th anniversary is also falling in vacation time; may be we will chill out in the beaches of Kerala..."


நீண்ட விடுமுறைக்கு செல்வதற்கு முதல் நாள்,இப்படி கூகிள் சாட்டில் யாரிடமும் பீட்டர் விடுவதற்கு முன், சற்று யோசித்தல் நலம்.ஒருவேளை
வந்ததும் இப்படி ஒரு பதிவு எழுதும் விதி நமக்கு வாய்த்திருக்கலாம்.

"அந்த ப்ளூ கலர் குர்தா நல்லா இருக்கு. ஆனா அவ்வளவா வொர்க் இல்லை.இந்த பச்சை கலர் சுமார்.ஆனா அர்ஜுன் சைஸ்க்கு பெரிசா இருக்கே...அந்த மரூன் ஏதோ கொஞ்சம் பரவால்ல.லைனிங் இருக்குல்ல?புள்ளைக்கு குத்தக்கூடாது பாருங்க. ஸ்டோன்ஸ் கூட கொஞ்சம் வெச்சு
வொர்க் பண்ணி இருக்கலாம்...கொள்ளை வேலை வெச்சு விக்கறீங்க.வெளில பிரஷ்ஷர் குக்கர் ப்ரீ ன்னு போட்ருக்கே அந்த offer இன்னும் இருக்குல்ல?" இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு ஆயிரம் ரூபாய்க்கு கலாமந்திர் கடையில் வாங்கிய பையனின் குர்த்தாவை பெங்களூரிலேயே வைத்து விட்டு ஊருக்கு போய்விட நேரலாம். அதை போய் இறங்கியதும் உணர்ந்து விட்டாலும், "வந்ததும் பெட்டியில் என்ன குடைஞ்சுட்டு இருக்க?" என்ற கேள்விக்கு "ஒன்னும் இல்லையே" என்று பொதுவில் சொல்லி விட்டு, தனியாக கணவர் நல்ல மூடில் இருக்கும் சமயமாக பார்த்து, "என்னங்க I did one blunder" அப்படி ஆரம்பித்து, "நீங்க திட்டலைன்னா சொல்றேன்" மற்றும் இன்ன பிற முன், பின் இடை செருகல்களுடன், கணவரிடம் மேட்டரை உடைக்கும் போது, அவர் கத்தாமல், திட்டாமல், ஒரு முறைப்புடன் இந்த பிரச்சனையை கடந்து சென்றால் அன்னைக்கு கிரக நிலை சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம்....அன்று எந்த காரியத்தையும் நம்பி துவங்கலாம்.

ஊரில் நடக்கும் விஷேஷங்களுக்கு மட்டுமே நகை அணியும் வழக்கம் என்பதால், அவை ஊர் லாக்கரில் தூங்கிக்கொண்டு இருக்கும். வியாழக்கிழமை காலையே ஊரில் போய் இறங்கி இருந்தாலும், சனியும் ஞாயிறும் தானே விசேஷம், லாக்கருக்கு நாளைக்கு போய் கொள்ளலாம் நகை எடுக்க....என்று அலட்சியமாக இருந்து விட, வியாழன் இரவு தான் உறைக்கும், வெள்ளிக்கிழமை ரம்ஜான், சனி விநாயகர் சதுர்த்தி, அடுத்து ஞாயிறு விடுமுறை என்று லாக்கர் திறக்க வழியே இல்லை. "அப்பாடா bank போகும் வேலை மிச்சம்" என்பதான நிம்மதியும், "ஆமா நகை எல்லாம் போட்டுக்கொண்டால் மட்டும் என்ன புதிதாக...." என்பதுமாக கலந்து கட்டி கணவர் விசில் அடித்து சிரிக்கும் காட்சியை எல்லாம் சமாளிக்க நிறைய பொறுமையையும் பெங்களூரில் இருந்தே KPN இல் லக்கேஜ் காசு கொடுத்தாவது அள்ளிக்கொண்டு போய்விடுதல் முக்கியம்.

'சரி அர்ஜூன்க்கு,நல்ல பெருமாள்ல போய் ஒரு டிரஸ் வாங்கி சமாளிப்போம்' என்று அவரே பிரச்சனைக்கு தீர்வும் கண்டு கூட்டி போய், ஒரு டிரஸ்ஸையும் செலக்ட் பண்ணி விட்டு "pack பண்ணிட்டு வா..நான் பில்லிங்ல இருக்கேன்", என்று கிளம்பி விட, 'இதான் டைம்' என்று யாரும் கவனிக்கிறார்களா என்று உறுதி படுத்தி கொண்டு அப்படியே அங்கே இருக்கும் பெரிய கண்ணாடி பக்கம் போய் முகம் பார்த்தால் பார்த்தால் ஐயோ! அதிர்ச்சி...முகம் முழுக்க ஏதோ அலர்ஜி ஆனது போல...புதிதாக ட்ரை பண்ணிய lakme பல்லை இளித்து :-(
பேசாம முகம் கழுவினோமா, பொட்டு வைத்தோமா என்றில்லாமல் எதுக்கு இந்த க்ரீம் முயற்சி எல்லாம்.சரி நேரம் அப்படி.சுத்தி சுத்தி அடிக்கிறது.

அடுத்த நாள் அதிகாலை, 'குழந்தையும் கணவரும் தூங்கறாங்களே' என்ற (டூ மச்)அக்கறையில் லைட் போடாமல் நைட் லாம்ப் வெளிச்சத்தில் நாம ஏதோ வேலை செய்ய, கணவரின் மிக முக்கிய பொருள் ஒன்றை பாழ் படுத்தி விட நேரலாம்.தூங்கி முழித்ததும் முதலில் அதை தான் தேட போகிறார். "ஐயோ என்ன சொல்வது? எப்படி reaction இருக்குமோ" என்று யோசித்தது கொண்டே அவர் விழிக்கும் வரை வெயிட் பண்ணும் அவஸ்தை இருக்கிறது பாருங்கள்.அதெல்லாம் அனுபவித்தால் தாங்க புரியும்.

ஒரு வழியா எல்லாவற்றையும் சமாளித்து பங்க்ஷன் எல்லாம் முடிந்து அசதியும் அலுப்புமாக குழந்தைக்கு எதையோ ஒன்றை ஊட்டி தூங்க வைத்து, வேலையை முடித்து அக்கடா என்று தலை சாய்க்கும் போது, அது தூக்கத்திலேயே இருமி, சாப்பிட்ட கொஞ்சூண்டையும் பெட்ஷீட்டிலேயே வாந்தி பண்ணி வைக்கும்.அப்போது நம் ஒவ்வொரு செல்லிலும் படபடப்போ... சுயபச்சாதாபமோ... கோவமோ... ஏதோ ஒன்று சர்ரென்று ஏறும். வயிற்றில் ஒன்றும் இல்லாமல், காலை மூன்றரைக்கு 'அம்மா பசிக்குது' என்று அழுகை வேறு.சரி விடுங்க, இனிமேல் தான் ஹைலைட்டே இருக்கிறது.

மறுநாள் கேரளா கிளம்பலாம்,என்று ரிசார்ட்டுக்கு போன் செய்தால், "sir,id is reyiningg here. we dond suggest you com this time" என்று ஒருவர் மலையாளங்கிலத்தில் சொல்லிவிடலாம். "சரி வேறு என்ன பண்ணலாம்" என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே...கணவரின் அலுவலக விஷயமாக, மெயில் வந்து, விடுமுறை பத்து நாளில் இருந்து ஐந்தாக இளைத்து,நாளைக்கே பெங்களூர் கெளம்ப வேண்டும் என்ற நிலைமை கூட வரலாம்.

"டைம் என்பது சூர்யா படம் மாதிரி; ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா (கல்யாண) வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி. அத நாம தான் ஓட்டனும்"

ஐந்தாண்டாக ஓ(ட்)டிக்கொண்டு இருக்கும் வெற்றியை கொண்டாடுவதற்காக, கேரளா ப்ளான் எல்லாம் சொதப்பி விட்ட நிலையிலும், அப்படியே பைக்கில் கன்யாகுமரி போய், கால் நனைத்து விட்டு, மாங்கா சுண்டல் சாப்பிட்டு, முத்து தோடு சிப்பி வளையல் எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். காலங்கார்த்தால எழுந்து, போன முறை முறைத்து கொண்ட முருகனை பார்த்து ராசியாகி விட்டதும் நிம்மதி.

எது எப்படியோ, பாதி லீவில் பேக்கப் பண்ணி பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும் ஆபீஸ், ஸ்கூட்டி, பெங்களூர், ப்ளாக் என்று மண்டையில் அடிபட்டவனுக்கு பழைய ஞாபகம் திரும்புவதை போல் நியாபகம் வரும் விஷயங்கள்... லேசாக தலைவலிக்கும்...

"ஏங்க தீபாவளிக்கு ஊருக்கு வர டிக்கட் கிடைக்குமான்னு ட்ரை பண்ணுவோமா..."

Tuesday, 31 August 2010

Meal with Monkeys

அலுவலகத்தின் இணைய மாதாந்திரி, "Potpourri " யின் ஆகஸ்ட் எடிஷனில் வெளியானது.

Have you ever shared a meal with a monkey? Well, I have and not just once!


About seven years ago, five of us, happily planned a day out to Nandi hills.

This story is not about where Nandi Hills is and how we went there etc. You always have internet to help with those details. There is one piece of information that you can’t fine on the internet: Carry a long stick when you go there. Let me tell you why…

We, 5 girls, were staying together back then and we cooked/packed chapattis and chole for a grand lunch up hill. As we got down at the top of the hill, we were all really hungry. The first thing we did was to open our lunch pack. We were thick friends, so thick that we planned to eat together from the same plate. So there it was, one plate of food and five hands attacking it. Suddenly we realized there was a sixth hand, much faster than the rest, which looked quite different than the manicured, nail polished hands, so to say! Only God Nandeeshwar knows when Mr. Monkey silently joined us. And he enjoyed our cuisine, as we all ran meters away from our food and him.

I said not just once! This time, about 2 months back, Nandi Hills with my family… Curd rice and potato fry. On our way, I was describing my earlier experience, and hence we decided to finish lunch down hill and then drive up. To our misconception, about twenty monkeys surrounded us as we just opened the box. This time no sharing meal!! They just took away the all the food including the box.

Later I gathered that the monkeys are scared of sticks and it seems the longer the stick, the farther they stay. So, unless you want to share your meal with the monkeys, carry a long stick along.

Earlier Nandi Hills was called Ananda Giri meaning The Hill of Happiness and it indeed is.

Thursday, 19 August 2010

வெட்டுக்கிளி(என்னை தேடுதே)

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம், ஒரு வெறுப்பு, ஒரு ஒவ்வாமை இருக்கும். நடிகைகள் பேட்டிகளின் போதெல்லாம் சொல்வார்களே.... எனக்கு பல்லின்னா பயம். கரப்பான் பூச்சின்னா பயம்...

 

என்னுடைய தோழி ஒருத்தி. தந்தூரி சிக்கன் என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவாள். ஆனால் அதே கோழி உயிரோடு இருக்கும் போது பார்த்தால், இவளை யாரோ தந்தூரி அடுப்புக்குள் தூக்கி போட்டு விட்டது போல அலறுவாள். அதுவும் கோழிகள் அதனுடைய இறக்கையை விரித்து படபடவென்று அடிக்குமே, அந்த போஸில் பார்த்தால் செத்து பிழைப்பாள். அவ்வளவு பயம். இன்னொருத்தி, அவளுக்கு புழு என்றால் பயம். பயம் என்பதை விட ஒரு விதமான அருவருப்பு. கம்பளி புழு டிஸ்கவரி சேனலில் காண்பித்தால் கூட உவ்வே என்பாள். அவள் சாப்பிடும் போது, ஒரு பேச்சுக்கு 'இன்றைக்கு வெண்டைக்காய் வெட்டும் போது புழு இருந்தது' என்று சொல்லி விட்டால், அன்று நமக்கு சாப்பாட்டில் மொத்த வெண்டைக்காய் வதக்கலும் வாய்க்கும். எனது சித்தி ஒருவர், தவளையை எங்கேயாவது பார்த்து விட்டால், அழுதே விடுவார்.

எனக்கு என்னவோ சின்ன வயசில இருந்தே வெட்டுக்கிளி என்றால் பயம். பயம் என்றால் சாதாரண பயம் இல்லை...எவ்வளவு பயம் என்று நீங்களே மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்டுக்கிளிகளில் இரண்டு ரகம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கிளிப்பச்சை கலரில் இருக்கும். இன்னொன்று மரக் கலர் என்று சொல்வாங்களே...அந்த மாதிரி பிரவுனும் சாம்பலும் கலந்த ஒரு வண்ணம். சிறுவயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி நிறைய மரம் செடி இருந்ததனாலோ என்னவோ வெட்டுக்கிளிகள் நிறைய இருந்தன. அதுவும் சைஸ் வாரியாக..சிலது ஒரு சாண் நீளம் கூட இருக்கும். சமயத்தில் மாலை நேரங்களில் விளக்கு போட்டதும், அவைகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருந்தது. வீட்டில் வேறு யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் அதை பார்த்தால் அப்படியே நடுங்கி விடும். அது ஒரு இடத்தில் சும்மா இருக்காது.அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும். ஐந்து வினாடிகள் கூட அங்கே இருக்காது. மறுபடி பறக்கும். மறுபடி செட்டில் ஆகும். அப்படி உட்காரும் போது 'டப்' என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்கிறது பயத்தில். சில நேரம் அது நம் மீது கூட வந்து உட்காரும். என் தம்பி எல்லாம் அதை ஏதோ தூசு மாதிரி தட்டி விட்டு விட்டு வேலையை தொடருவான். நான் அது  உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அடுத்த ரூமிற்குள் போய் கதவை சாத்தி கொண்டு விடுவேன். என் வீட்டினர் என் மீதும் வெட்டுக்கிளியின் மீதும் இரக்கப்பட்டு அதை பிடித்து வெளியே போட ஆரம்பித்தார்கள்.

அதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அது பறந்து கொண்டே இருக்கும் போது ஒரு துணியை வீசி அதை பிடித்து வெளியில் எறிவார்கள். சில நேரம் அது தரையில் உட்கார்ந்தது என்றால் அதன் மீது ஒரு பாத்திரத்தை போட்டு மூடி அப்படியே நகர்த்தி கொண்டே போய் கதவுக்கு வெளியே பாத்திரத்தை திறந்து விட்டு அதே நேரத்தில் கதவையும் மூடுவார்கள். "போன முறை நான் பிடிச்சு போட்டேன் இல்ல, இன்னைக்கு நீ பண்ணு" என்பது போன்ற உரையாடல்கள் எங்கள் வீட்டில் சகஜமானது. எனது பாட்டிக்கு என் மீது மிக பிரியம். வீட்டிற்குள் அது வந்ததும் "அவ பாத்தா பயப்படுவா"ன்னு விளக்குமாறை எடுத்து கொண்டு கிளம்பிவிடும்.

யார் கையிலாவது அது மாட்டும் வரை படபடப்பாக அடுத்த ரூமுக்குள் இருப்பேன். சில நேரம் அம்மாவும் அப்பாவும் பிசியாக இருந்தால், என் தம்பியிடம் கெஞ்சுவேன். "டேய் ப்ளீஸ் டா, அதை பிடிச்சு போடுடா" என்று...அவன் அசால்ட்டாக, "நேத்து பெரிய கேக் பீஸ் நீ எடுத்துகிட்டு எனக்கு சின்னது தந்த இல்ல...போ போ பிடிச்சு போட முடியாது" ன்னு நேரங்காலம் தெரியாமல் வெறுப்பேற்றுவான்.

 'பிடிச்சு போட்டாச்சு வா..' என்ற வார்த்தை கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்புவேன். இருந்தாலும் நிஜமா நிஜமா...என்று நான்கு முறை கேட்டு, யாராவது ஒருவர் சத்தியம் செய்ததும் தான் வெளியில் வருவேன்.சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட ஓடி இருக்கிறேன்.

டிசம்பர் பூ என்று ஒன்று இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நிறைய பூக்கும். ரோஸ், ஊதா, வெள்ளை, ராமர் கலர் என்று ஒன்று, ஊதாவில் வெள்ளை கோடு போட்டு இருக்கும். இப்படி நிறைய கலர்களில். எங்கள் தோட்டத்தில் எல்லா கலரிலும் செடிகள் இருந்தது. உடைக்கு மேட்சாக அந்த கலர் பூவை நீளமாக தொடுத்து அம்மா வைத்து விடுவார்கள். பூ பூப்பதற்கு முன் வரும் மொட்டுக்கள் கிட்டத்தட்ட பச்சை வெ.கி மாதிரியே இருக்கும். ஒரு முறை பூ பறித்து கொண்டு இருந்தேன். அந்த செடியில் ஒன்று உட்கார்ந்து இருந்து இருக்கிறது. அது தெரியாமல் நான் பூ பறிக்க, தவறி போய் என் கை அதன் மீது பட்டு விட்டது. அது பறந்து என் மீது பாய, நான் அலறிய சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அம்மா அப்பா எல்லாம் தோட்டத்தில் பாம்பு ஏதும் வந்து விட்டதோ என்ற ரீதியில் பயந்து போய் ஓடி வந்தார்கள்.

அது கூட பரவாயில்லை. எட்டாவது படித்து கொண்டு இருந்த போது, எனக்கும், ஒன்பதாவது வகுப்பில் இருந்த பார்கவிக்கும் சுத்தமாக ஆகாது. எப்போதும் முறைத்து கொள்வோம். பார்கவிக்கு எனது இந்த பயம் எப்படியோ தெரிந்து போனது. ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது மைதானத்தில் என் முன்னால் வந்து நின்றது பார்கவி. 'என்னையா பகைச்சுக்கற?' என்ற ரீதியில் ஒரு பார்வை. முதலில் அசராத நான், அப்பறம் தான் கவனித்தேன். அதன் கையில் ஒரு பச்சை கலர் வெ.கி."போடாதே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நான் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே என் மீது போட்டு விட்டது. நான் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டேன். முழித்து பார்த்த போது, சில பெண்கள் தண்ணீர் பாட்டிலோடு என்னை சுற்றி நிற்க, பார்கவி "ப்ளீஸ் ப்ளீஸ் டீச்சர் கிட்ட சொல்லிடாதே" என்று என்னை கெஞ்சி கொண்டு இருந்தது..

-----௦-------***--------------
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட இந்த பயம் மட்டும் அப்படியே இருக்கிறது. 'டேய் டேய் தம்பி அத பிடிச்சு போடுடா' மட்டும் 'ஏங்க ப்ளீஸ்ங்க.. அத பிடிச்சு போட்டுடுங்க' என்பதாக மாறி இருக்கிறது.

இப்போது நாங்கள் இருக்கும் வீடு மூன்றாவது மாடி. அபார்ட்மெண்டில் நிறைய செடிகள் இருக்கின்றன. அதை பார்த்ததுமே ஓரளவுக்கு உஷாராகி கிரவுண்ட் ப்ளோரில் வீடு வேண்டாம் என்று ஓனரிடம் சொல்லி, கடைசி மாடியில் செட்டில் ஆனோம். ஆனாலும் சில சமயம் மாடி வரைக்கும் பறந்து வந்து விடுகின்றன. நானும் கெஞ்சி கொண்டே இருக்கிறேன்.

------****---------------

நேற்று ஒரு மீட்டிங் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகி விட்டது. அண்டர்கிரவுண்டில் வண்டியை பார்க்கிங் பண்ணி விட்டு லிப்டுக்குள் நுழைந்து 3 என்ற எண்ணை அமுக்கினேன்.

டப்.

லிப்ட் கதவு மூடும் அந்த வினாடியில் பச்சையாக பெரிய சைசில் ஒன்று உள்ளே பறந்து வந்து லிப்டில் இருக்கும் லைட்டின் மீது உட்கார்ந்தது. விதிர்த்து போய் "ஓபன்" பட்டனை அமுக்க என் கை அனிச்சையாக நீண்டது.

சட்

.

.

.

பவர்கட்.
-----------*****------------

Tuesday, 3 August 2010

Police Story

 'எங்க பரம்பரையிலேயே யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சு கூட படுத்தது இல்லை'
எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்னா, நான் நேற்று போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் விஷயமாக நேற்று காலை சுமார் பதினொரு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், கணவர், குழந்தை.போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் "எல்லோ பேஜஸ்" மூலமாக அறிந்து கொண்டு, அந்த ஏரியாவில் சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படி போக வேண்டும் என்று விசாரித்தோம். "இப்படியே நேரா போங்க, இடது பக்கம் வரும்" என்றார்;அவரை பார்க்க போலீஸ் மாதிரியே இருந்தார். எனக்குள் ஏதோ ஒரு பயங்கர ஆர்வமும் டென்சனும் கலந்த ஒரு பீலிங் இருந்தது.

தமிழ் சினிமா பார்த்து பார்த்து போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படி இருக்கும் என்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பிம்பம் இருந்து இருக்கும் போலும். பொன்னம்பலம் சாயலில் ஒரு இன்ஸ்பெக்டர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்; ஜெயிலுக்குள் கம்பிக்கு பின்னிருந்து இரண்டு மூன்று தலை எட்டி பார்க்கும். நாம் 'அட்ரஸ் வெரிபிகேசன்க்காக வந்து இருக்கேன்' என்று சொன்னதும், "போ போ; அப்படி உக்காரு; கூப்பிடறோம்" என்று விரட்டி அடிப்பார்கள். இப்படி ஏதேதோ யோசித்து கொண்டு போன எனக்கு அந்த கட்டடத்தை, பெரிய கட்டடம் என்று சொல்வதற்கில்லை; ஒரு சிறிய வீடு சைசில் இருந்த ஸ்டேசனை பார்த்ததும் முதல் அதிர்ச்சி, சினிமாவில் வர்ற மாதிரி செவப்பு கலரில் இல்லை. மஞ்சள் கலர் பெயின்ட், அதுவும் பெயிண்ட் அடித்து பல வருடம் ஆகி இருக்கும் போலும்.

வாசலில் ஒரு பக்கம் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட இருபது டூ வீலர்கள் அழுக்கடைந்து போய் நின்று கொண்டு இருந்தன. திருட்டு கேசில் பிடிதததோ, நோ பார்கிங்கில் அள்ளியதோ தெரியலை. பாதி உடைந்த நிலையில் ஒரு சேர் அந்த டூ வீலர்களின் மீது கிடந்தது.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம்.கதவருகில் நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கையில் பலாப்பழத்தின் ஒரு பகுதியை வைத்து கொண்டு அதில் இருக்கும் சுளைகளை லாவகமாக பிய்த்து பிய்த்து தின்று கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பீச்சில் பலூன் சுடுவோமே, அதே மாதிரி சைசில் ஒரு நீளமான துப்பாக்கி, சுவரில் சாய்த்து வைக்க பட்டு இருந்தது. அதன் குழல் பகுதியில் அவருடைய தொப்பியை மாட்டி இருந்தார்.

'ஹலோ சார்' என்றார் கதிர்.

'வாங்க வாங்க' திருமண வீட்டில் வரவேற்பதை போல வரவேற்றார் கன்னடத்தில்.

'பலாச்சுளை சாப்பிடுங்க' எனக்கு யாரோ முகத்தில் பலா சக்கை வைத்து அறைந்ததை போல் இருந்தது.

'பரவாகில்லா சார்; ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் செய்யணும்" கதிர் அவருக்கு தெரிந்த கன்னடத்தில்.

'மொதல்ல நீங்க பலாச்சுளை எடுத்துக்கோங்க, பையனுக்கும் கொடுங்க'

'இல்ல சார், அவனுக்கு சளி பிடித்து இருக்கிறது' கதிர் ஒரு சுளையை பிய்த்து எடுத்து கொண்டார்.

'மேடம் உங்களுக்கு...' என்னிடம் நீட்டினார்.

'இல்லை வேணாம் தேங்க்ஸ்'

'இப்படி உக்காருங்க; குமார் வருவார்; வந்ததும் பேசுங்க' என்று ஒரு பெஞ்சை காண்பித்து விட்டு சுளையில் பிசியானார்.

அந்த பெஞ்சில் ஏற்கனவே ஒரு இளைஞன் (ஆப்ரிக்கர் என்று நினைக்கிறேன்; பெங்களூரில் நிறைய ஆப்ரிக்கர்கள் தென்படுகிறார்கள்) உட்கார்ந்து இருந்தான். நாங்களும் உட்கார்ந்து கொண்டோம்.ஸ்டேசன் முழுக்க ஒரே பலாப்பழ வாசனை. உள்ளே இருந்த அத்தனை பெண்/ஆண் போலீஸ் கையிலும் பலாப்பழத்தின் ஒரு ஒரு பகுதி.லாவகமாக உரித்து உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து சுற்றி முற்றி பார்த்தேன். கம்பிக்கதவு போட்ட அறை கண்ணில் படவே இல்லை. ஒரு மேஜை போட்டு அதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எங்களை அடுத்து ஒரு அறை. அறை முழுக்க ஒரே பைல்கள். பேப்பர்கள். அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் என்று போர்ட் போட்டு அரை(half) கதவு போடப் பட்டு இருந்தது. உள் அறையில் இருந்து வந்து ஒருவர் என்னிடம் 'பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'சற்று பொறுங்கள்' என்று சொல்லி விட்டு போனார். அவர் யூனிபார்மில் இல்லை. மப்டி போலும்.


நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு பின்னால், ஒரு போர்டில், 'Civilians Rights' என்று FIR பற்றின ரூல்ஸ் எழுதி வைத்து இருந்தார்கள்.Non Fatal Accidents க்கு FIR காப்பி வேண்டும் என்றால் 50Rs கட்ட வேண்டுமாம்.Fatal என்றால் 81Rs.நாம் ஏதாவது கேஸ் கொடுத்தால், ஒவ்வொரு மாதமும் அதில் என்ன progress என்று status update கேட்கலாமாம்.

அப்போது இன்னொரு போலீஸ்காரர், மிகவும் வயதானவர், உள்ளே நுழையும் முன், ஸ்டேஷன் வாசலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து புன்னகைத்தார். பிறகு அங்கே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும், அவரிடம் வந்து அமர்ந்தனர். 'Anticipated bail' என்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.

திடீர் என்று வாசலில் நாங்கள் சந்தித்த பலாச்சுளை போலீஸ், பரபரப்பாக தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, துப்பாக்கியை கையில் எடுத்து தோள் மீது சாய்த்துக்கொண்டு விறைப்பாக நின்றார். போலீஸ் ஸ்டேசன் ஒரே பரபரப்பாகி எல்லாரும் எழுந்து கொண்டார்கள். நாங்களும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து கொண்டோம். ஆர்வமாகி வெளியே எட்டி பார்த்தேன். வந்தது பெரிய போலீஸ் போலும். பலாச்சுளை போலீஸ் சல்யுட் அடித்தார். பெரிய போலீஸ் நேராக உள்ளே வந்து எங்களுக்கு அடுத்து இருந்த அறையை கடந்து இன்ஸ்பெக்டர் என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.சற்று முன் வந்தமர்ந்த வயதான போலீஸ், எங்களை நோக்கி "உக்காருங்க" என்பதாக சைகை செய்தார்.

ஒரு பெண்மணி, சற்று கலவரமான முகத்துடன், கையில் ஒரு சிறுவனை பிடித்தபடி வந்தார். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். அவரும் அந்த பலாச்சுளை போலீசிடம் போய் ஏதோ விசாரிக்க, அவர் நாங்கள் அமர்ந்து இருந்த பெஞ்சை காட்டி, 'அங்கே போய் உட்காருங்க, என்றார். உடனே இந்த ஆப்ரிக்க இளைஞன் எழுந்து கொண்டு அந்த பெண்ணை அமர சொன்னான். அவரும் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்தது. அர்ஜுன் பொறுமை இழந்து, "அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்மா" என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான். நானும் வேடிக்கை பார்ப்பதும் வாட்ச் பார்ப்பதுமாக சற்று சலித்து இருந்தேன்.

'நீங்க உள்ளே வாங்க' எங்களை காத்திருக்க சொன்ன மப்டி போலீஸ்  வெளிப்பட்டு எங்களை அழைத்து கொண்டு போனார். ஒரு சிறிய மேசை, நாற்காலி. பிரிண்டர்.'எங்கள் ஸ்டேசன் ரொம்ப சிறியது; ஆனால் வேலை அதிகம்.அதனால் தான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வைக்க வேண்டியதாகி விட்டது; உட்காருங்கள்' என்றார்.

ஒருவர் தான் உட்கார முடியும்; நான் உட்கார்ந்து கொண்டேன்.

உடனே அவர் அங்க இருந்த ஒரு பெரிய மர பெட்டி மீது இருந்த பைல்களை எல்லாம் நகர்த்தி வைத்து கதிரையும் அர்ஜூனையும் உட்கார்ந்து கொள்ள சொன்னார். அவருக்கு அருகில் இருந்த இன்னொரு பெட்டியை திறந்து ஏதோ தீவிரமாக தேட ஆரம்பித்தார்.

அவர் குனிந்து கொண்டு தேட ஆரம்பித்தும், நான் இன்ஸ்பெக்டர் அறைப்பக்கம் நைசாக எட்டி பார்த்தேன். அங்கு ஹோட்டல் ரெசப்ஷனில் எல்லாம் போட்டு இருப்பார்களே, உயரமான வட்ட வடிவ மேசை; அந்த மாதிரி ஒரு மேசை, அதில் ஒரு கம்ப்யுட்டர்; இன்ஸ்பெக்டர்; எதிர்த்தாப்பல அந்த anticipated bail பற்றி பேசியவர்கள். அவர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஏதோ புள்ளிவிவரம் எல்லாம், கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அளவுக்கு கன்னடம் தெரியாததால் என்ன பேசினார் என்று தெரிய வில்லை.

இதற்குள் இங்கு நம்மிடம் பேசிக்கொண்டு இருந்தவர், அவர் தேடி கொண்டு இருந்த பைல் காணவில்லை என்பதை கண்டு பிடித்து, யாரிடமோ போனில் பேசி விட்டு "குமார் பைல் எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாராம்; அதனால் இப்போது உங்கள் வேலை முடியாது" என்ற மிக பெரிய உண்மையை எடுத்து உரைத்தார்.

'சரிங்க ரொம்ப நன்றி' என்று சொல்லிவிட்டு நாங்களும் நாங்கள் கிளம்பி விட்டோம்...

பெஞ்சில் என்னோடு உட்கார்ந்து இருந்த பெண்ணும் அவருடைய பையனும், அந்த ஆப்ரிக்க இளைஞனும் தங்களில் யாரை அடுத்து கூப்பிடுவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

Thursday, 29 July 2010

தமிழாக்கம் தருக - போட்டி

எட்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்று நினைக்கிறேன்.

தமிழ் பாடத்தில் ஒரு பகுதி உண்டு. ஆங்கில பழமொழிகள் கொடுத்து அதற்கு இணையான தமிழ் பழமொழிகளை எழுத சொல்வார்கள்.

Empty vessel makes more noise என்றால் நாம் "குறைகுடம் கூத்தாடும்" என்று பதில் அளிக்க வேண்டும்.

As you sow so shall you reap - வினை விதைத்தவன் வினை அறுப்பான்; கத்தி எடுத்தவன் கத்தியால் மாள்வான்.

 இதில் என்ன பிரமாதம் என்று தோன்றலாம். பிரமாதம் என்பதற்கில்லை என்றாலும் இது சுவாரஸ்யமானது.

'Every dog has its day'
இதை தமிழ்ப்படுத்தினால், 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்' எனலாம்.

ஆங்கில பழமொழியில் இருப்பதோ நாய். தமிழில் யானையும், பூனையும்...

You are what you eat - சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
இதில் சுவரும் சித்திரமும் சாப்பிடுவதோடு பொருந்தி போகிறது பாருங்கள்.

முதலில் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்து புரிந்து கொண்டு அதற்கு தமிழில் பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசிக்க வேண்டும்.

சிறுவயதில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடிய விளையாட்டு.

பழமொழிகள் மட்டும் என்று இல்லை. Phrases என்று சொல்வார்களே...அதிலும் தமிழாக்கம் சுவையானது.உதாரணத்துக்கு
A slip between the cup and lip
என்றால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது'

இப்போது போட்டிக்கு வருவோம்.

பொதுவாக நாம் அடிக்கடி கேட்கும், புழங்கும் சில phrase களை (முதலில் இந்த phrase க்கு சரியான தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கள்) இங்கு தருகிறேன். அதை தமிழாக்கம் பண்ணி பின்னூட்டுங்கள்.

சரியான தமிழாக்கம் தர வேண்டும் என்றாலும், உங்கள் மனதில் அந்த phrase / பழமொழியை படித்ததும் சட்டென்று என்ன தமிழாக்கம் தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்.
Don't try to teach your Grandma to suck eggs;
இதற்கு இணையாக தமிழில் பழமொழி, சொலவடை இருக்கலாம்.
ஆனால், இதை படித்ததும் எனக்கு

'முருகனுக்கே வேலா? அண்ணாமலைக்கே பாலா? திருப்பதிக்கே லட்டா?'

இந்த மாதிரி தோன்றியது.

Ok, now start music;

1)Rose is a rose is a rose

2)Uneasy lies the head that wears a crown

3)The smallest worm will turn, being trodden on

4)Can a leopard change its spots?

5)A chain is only as strong as its weakest link

6)A fish rots from the head down

7)Don't cast your pearls before swine

8)Every cloud has a silver lining

9)It ain't over till the fat lady sings

10)A nod's as good as a wink to a blind horse

பின் குறிப்பு:சிலவற்றுக்கு ஆங்கில அர்த்தம் தேவைப்பட்டால்
கூகிளில் கிடைக்கும்.

முக்கிய பின் குறிப்பு:
ஏதாவது போட்டி வெக்கலாமே என்று உசுப்பேற்றிய சிலருக்காக இந்த
பதிவு.

"அடிச்ச கைப்புள்ளைக்கே...."மாதிரி ஆக்கி விடாதீர்கள் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, 27 July 2010

ஒரு ஊருல ஒரு குரங்கு....

சரியான விடையை தெரிவு செய்க.


இவர்களுள் யார் மிக சிறந்த கொடைவள்ளல்

1)முல்லைக்கு தேர் தந்த பாரி

2)மயிலுக்கு போர்வை தந்த பேகன்

3)குரங்குக்கு செருப்பு தந்த கிருத்திகா

4)கிருத்திகாவின் செருப்பை திருப்பி தந்த குரங்கு

மூன்றாவது விடையை டிக் செய்ய வேண்டுமானால் அதற்கு முன் நீங்கள்
கீழே உள்ள கதையை தெரிந்து கொண்டு விடுதல் இன்றியமையாததாகிறது.

கதையை ஆரம்பிக்கும் முன் கதையின் சப்போர்டிங் ஆக்ட்ரஸ் கிருத்திகா பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

சிறுவயதில் பூந்தளிர் என்ற புத்தகம் படித்து இருப்பீர்கள். ஆங்கிலத்தில் tinkle என்று கிடைக்கும்.அதில் கபீஷ் என்றொரு குரங்கு கதாபாத்திரம் வரும். அந்த குரங்கு ஹனுமானிடம் வேண்டி தன்னுடைய வாலை தேவையான அளவு நீட்டி மடக்கும் வரம் வாங்கிக்கொண்டு விடும்.

அந்த எலாஸ்டிக் வாலை வைத்துக்கொண்டு சேட்டைகள் பண்ணிக்கொண்டு இருந்த அது, ஒரு நாள் ஹனுமானிடம் போய், 'எனக்கு குரங்கா இருந்து இருந்து போர் அடிக்குது, என்னை மனுஷனா பொறக்க வெய்யுங்க'ன்னு கேட்டுச்சாம். உடனே ஹனுமான் "சரி நீ பூமில போய் கிருத்திகாவா பொறந்துக்கோ" ன்னு சொல்லிட்டாராம்.

இந்த கிருத்திகா காலேஜில் என்னுடைய கிளாஸ்மேட்.மனித பிறவி
எடுத்துட்டாளே தவிர அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு இருந்தது.கிளாசில்
கடைசி பெஞ்சுக்கு முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவள்
செய்யாத சேட்டை இல்லை. பெரும்பாலும் அவள் மாட்டிக்க மாட்டாள்.
நாங்க யாராவது தான் சிரித்து வைத்து மாட்டுவோம்.

எங்கள் வகுப்பில் எல்லாரும் சேர்ந்து செஞ்சிக்கோட்டை(அமர்க்களம்
படத்துல அது வேண்டும், இது வேண்டும் என்று அஜீத் ஆக்ரோஷமா பாடி
ஆடுவாரே அந்த இடம்) ஒரு நாள் சுற்றுலா சென்றோம்.
கீழே பஸ்ஸை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டு இருந்தோம்.

கிருத்திகா கையில் பிரித்த குட் டே பிஸ்கட் பாக்கெட். காலில் புத்தம்
புது செருப்பு. கதைகளில் எல்லாம் எழுதுவார்களே...புது மெருகு
குலையாத என்று...அந்த மாதிரி விலை கூட அழியாது இருந்தது.

இங்க தான் கதையின் முக்கிய கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.
இல்லை தாவுகிறது... கிருத்திகாவின் கையில் இருந்த பிஸ்கட்டை
பார்த்து ஆவலானது போலும்...அவளோ குரங்கை பார்த்த அதிர்ச்சியில்
உறைந்து போனவள், பிஸ்கெட்டை தூக்கி போட்டு விட தோன்றாமல்,
ஓட ஆரம்பிக்க...புத்தம் புது செருப்பு ஒன்று கழண்டு விழுந்து விட,
குரங்கு 'கிடைத்த வரைக்கும் சரி' என்று ஒரு செருப்பை வாரிக்கொண்டு
ஓடியே விட்டது.

இருங்கள். உடனே அவசரப்பட்டு மூன்றாவது விடையை தெரிவு செய்து
விடாதீர்கள்.

எங்கே விட்டேன்? ஆம், குரங்கு ஒரு செருப்பை தூக்கி கொண்டு ஓடி
விட்டதோ...நம்ம கிருத்திகா ஒற்றை கால் செருப்புடன், ஆனால்
பிஸ்கட் பாக்கெட்டை மறந்தும் கூட விட்டு விடாமல் நிற்கிறாள்.
செருப்பு போன சோகம் அவளுக்கு, பிஸ்கட் பிழைத்த சந்தோஷம்
எங்களுக்கு. இப்படி ஒரு உணர்ச்சி கலவையுடன் மலை ஏறும்
பயணத்தை தொடர்ந்தோம்.
 
பொறுங்கள். மலையில் இருந்து இறங்கும் போது தான்  கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

'ஒரு செருப்பை வைத்து என்ன செய்ய போற டீ...அதையும் தூக்கி
போடு...' என்று நாங்கள் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் அவள்
கேட்காமல் ஒரு செருப்பை கையில் தூக்கி கொண்டே வந்து கொண்டு
இருந்தாள். இறங்கி வரும் போது பார்த்தால், எந்த இடத்தில் அபேஸ்
பண்ணிக்கொண்டு போனதோ, அதே இடத்தில், அவளுடைய செருப்பு.
"இந்தா வெச்சுக்கோ" என்று விட்டு விட்டு போய் இருந்தது குரங்கு.

இப்போது மேலே உள்ள மூன்றாவது விடைக்கு கீழே ஹைலைட் பண்ணி
பாருங்கள்.

கிருத்திகாவிற்கு குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவம் தான் இருக்கிறது. எனக்கோ, குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில்
சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Monday, 7 June 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:

ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.

கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முஸ்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.

ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.

இட்லிவடையில் வெளியானது.