Wednesday 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

10 comments:

Anonymous said...

சுவாரஸ்யமான பதிவுகள். நன்றி!

//ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்//

பிரிச்சுப் பார்த்தாலே தூக்கம் வருமே, அந்த டைப் பொஸ்தகங்களையா சொல்றீங்க? அதெல்லாம் காலேஜ் நாளோட போச்சுன்னு நினைச்சேன், இன்னுமா? எகொஇச? ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Rajalakshmi Pakkirisamy said...

பிடிச்சவங்க எல்லோரையும் தனி தனியா போட்டா நாங்க என்ன பண்ணுவோம். கில்கிறிஸ்ட், சச்சின், வார்னே, டிராவிட், சேவாக், விஜய், சங்கரகரா எல்லோரும் ஒரே டீம்ல இருந்தா நல்லா தான் இருக்கும். ஆனா ஜெயிக்க போவது சச்சின் தான். கில்கிறிஸ்ட் வாங்கினா கூட நல்லா தான் இருக்கும்.டோனி, கங்குலி, யுவராஜ்க்கு கிடைக்காத வரை எனக்கு ஓகே.

வயிற்றெரிச்சல் ஸ்பாட் .. ஹி ஹி ஹி

லஞ்ச் கொஞ்சம் பார்சல் அனுப்பவும்

//நான் பாட பாட// நீங்க பாடுறத நிறுத்தனும்னு உங்கள சிரிக்க வைச்சிட்டானோ அர்ஜுன்!

Rajalakshmi Pakkirisamy said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

Unknown said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

///மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான். /////


காக்டெயில் அளவோட சாப்பிடனும் , ஓவரா சாப்பிட்டா இப்படிதான் ஆசை வரும்

Santhappanசாந்தப்பன் said...

//திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு//


எங்கேயோ இடிக்குதே!


எனக்கு தெரிஞ்சு, அந்த மாதிரி யாரும் கொண்டாடுறா மாதிரி தெரியலியே!

இங்கே எல்லா பண்டிகைகளுமே, மத சார்புடன் மட்டுமே உள்ளன!! மத சார்பற்று எல்லோரும் கொண்டாடும் ஏதாவது ஒரு பண்டிகை சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஜனவரி ஒன்று கூட, மதசார்புடையது தான்

சரி அதை விடுங்க! விஷுக் கனி பார்த்தாச்சா?

என்’ணில் அடங்கா எண்ணங்கள்!!

*Kathir* said...

புத்தாண்டு விஷயத்தில், உங்கள் கருத்துதான் எனதும்:) கொண்டாடுவதற்கு நாள் கணக்கென்ன?? நான் ஒரு கேரளா நண்பரிடமிருந்து அறிந்தது... VISHU மட்டுமல்லாது இன்னொரு புத்தாண்டும் மலையாளிகளுக்கு இருக்கிறதாம். அது ஓணம் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக வருமாம். அதன் முதல் மாதம் 'chingam'. அதாவது... விஷு என்பது astrological based (like April 14 for us) and மற்றொன்று official (like Jan 14). அவர்கள் எந்த சர்ச்சையும் இல்லாமல் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். நாம்தான் இதெற்கெல்லாம் over react செய்கிறோம். இதற்கெல்லாம் சர்ச்சை செய்யும் நாம் விவசாயம் போன்ற வாழ்வாதரங்களை இழக்கும் சூழ்நிலையை கூட உணராமல் just like that இருக்கிறோம் :(

சரி அதெல்லாம் இப்போ எதுக்கு...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல் வாழ்த்துகள் :) :)

Anonymous said...

// இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாரு //

வேற யாரு? நம்ம சநா கானா தான் :)

Rajiv.... said...

// என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும் //

Akka, Antha kodumayana Climax naan parthen.. But en vayala eppadi solrathu :(