Wednesday 30 December 2009

அப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்?

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் காலமானார்.

சற்று முன் என்னுடன் வேலை செய்கிற ஒரு பெண்ணும் நானும், அவளுடைய ஆக்டிவாவில் வெளியில் சென்று வந்தோம்.

ஒரு மெயின் ரோட்டில் ரெண்டு பைக்கில் கர்நாடக கொடியுடன் இருவர் ஏதோ கன்னடத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே போக, பின்னால் ஒரு திறந்த வேனில், விஷ்ணுவர்த்தன் புகைப்படத்துக்கு மாலை சாற்றப்பட்டு பைக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த தெருவின் கடைகாரர்கள் "பட பட" என்று ஷட்டர்களை இழுத்து விட்டார்கள். எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம்.

வந்து நேரா லஞ்ச் போனோம். விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமான லஞ்ச் மேட்கள் leave. இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணா சேந்து தான் போய்கிட்டு இருக்கோம். ரெண்டு வடக்கு, ரெண்டு ஆந்திரா, ஒரு தமிழ்-இது நான் , ஒரு கன்னடா, ஒரு மலையாளி என்று ஒரு பாரத விலாசாக இருந்த லஞ்ச் டேபிள்.

நாங்கள் நடந்ததை சொல்லவும், ராஜ்குமார் மறைவின் போது, பெங்களூரில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து, பேச்சு எங்கெங்கோ சென்றது.ஒரு வடக்கர் தான் ஆரம்பித்தார்.

"இதென்ன ஒரு நடிகர், இயற்கையாக இறந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"

ஒரு தெலுங்கரை பார்த்து, "உங்க ஊரிலும் தான் ......ரை, கடவுளாக நினைக்கிறார்கள்".
தெலுங்கர் பதிலுக்கு, " ஏன், உங்க ஊர்ல இல்லையா? ..............னுக்கு உடம்பு முடியாமல் இருந்தப்போ பூஜை எல்லாம் பண்ணீங்க?"

அடுத்த வடக்கர்.

அவருக்கு டார்கெட் நான்.

"உங்க ஊருல ................... துக்கு, ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, இப்டி தான் கலவரம் பண்வீங்களா?"

"ஒரு மனுஷ உயிர் ஜோக் பண்ற விஷயம் இல்லை"  இது என்னை அடுத்து அமர்ந்து இருந்த மலையாளி. கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டார்.

இப்படி நடிகர்களில் ஆரம்பித்த பேச்சு, அப்படியே தெலுங்கானா, காவேரியை எல்லாம் தொட்டு, நம்ம திருவள்ளுவரில் வந்து நின்றது.
" சமீபத்துல கூட ஒரு சிலை திறந்தாங்களே...எத்தனை பாதுகாப்பு எத்தனை போலீசு, ஆமா யார் அவர்?"


"யாரோ முனிவராம்" (some saint itseems)

கேட்டவர் தெலுங்கர். பதில் சொன்னவர் கன்னடர்.

இதுக்கு மேல என்னால முடியலை.

"முனிவரா? அவர் யார் தெரியுமா?" ன்னு ஆரம்பிச்சு மூச்சு வாங்க சொல்லி முடிச்சப்போ,

"ச்ச ச்ச 1330 இல்ல, நூத்து பதினஞ்சோ என்னவோ" (hey not 1330 man , some 115 )

(அட பாவி..எனக்கேவா?)....."இல்ல 1330 தான்"  லேசாக அழுகை வந்தது.

"சமீபத்துல நான் கன்னியாகுமரி டூர் போனேன். அங்க கூட அவரோட சிலை கட்டி இருக்காங்க, அதன் உயரம், அடிக்கணக்கில் வந்து அவர் எழுதின பாட்டுகளோட எண்ணிக்கை ன்னு தான் சொன்னாங்க..I am sure its not 1330 feet tall"

"Oh thats 133 feet tall. The 1330 couplets are arranged as 133 parts with 10 couplets each"

"Oh ok"

பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.

Monday 28 December 2009

Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)

ஒருத்தி ஒன்றுக்கு மூணு SuperHit படம் பாத்தா என்ன நடக்கும்? இதான்.

இந்த பதிவில் இருக்கும் கமெண்டை பார்த்த பிறகும்,  படம் பார்க்க வேண்டும் என்ற சபலம். தல, தளபதில்லாம் மசாலா வறுக்கும் போது வர்ற எரிச்சல் சூர்யா மேல வரலை. இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல கார்ல ஒட்ட வைச்ச bomb எடுத்து ஹெலிகாப்ட்டர்ல போயிட்டு இருக்க வில்லன் மேல எரிஞ்சுட்டு, அப்டியே தண்ணில குதிச்சு பொழைக்கறது எல்லாம், கேப்டன் கூட இப்போல்லாம் இந்த மாறி பண்ண மாட்டார். பொதுவா KSR படத்துல எல்லாம் அவர் ஒரு சீன்ல வந்து எதாச்சும் பண்ணுவார். படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல அழகா நாலு ஸ்டெப் போடுவார்.தெனாலில மீனாவை கூட்டிட்டு வருவார். இதுல புரடியூசரை அழைச்சுட்டு வந்து குழி பணியாரம் செய்ய சொல்லி தரார். எனக்கு தீபாவளி அன்னைக்கு வெறும் பணியாரம் சாப்பிட்டு வயிறு வலி வந்த மாறி இருந்துச்சு.

வயிறு வலியோட விட்டதா? ஜெயம் ரவி அப்படி என்னதான் பண்ணிருக்கார்ன்னு பாக்கலாம் ன்னு ராத்திரில ஒரு திடீர் முடிவு.
என்னென்னவோ பண்ணிருக்கார். எருமைமாட்டுக்கு பிரசவம் பாக்கறார். பொலிடிகல் எகனாமிக்ஸ் சொல்லி தரார். பாத்ரூம் கழுவறதுல கூட பாடம் இருக்குன்னு பீலிங்க்ஸ் விடறார். காட்டுக்குள்ள வெள்ளைக்காரன்களை (அட, படத்துல அவிங்களை அப்டி தான் சொல்றாங்க), பொசுக்கு பொசுக்குன்னு வீசி தள்ளுறார். கடசில ஏவுகணையை கூட திசை மாத்தி விடறப்போ, என் வயித்து வலியை தலைவலியா மாத்தி விட்டார். நல்ல வேளையாக,ஏவுகணையை பிடிச்சு தொங்கிட்டு போய்....அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம். ஆனாலும் கல்பனாவா வர்ற அந்த பொண்ணு ரொம்ப ஸ்மார்ட், சின்மயி குரலா?
Commodity<->Commodity
Commodity->Money->Commodity
Money->Commodity->Money
என்று கார்ல் மார்சை எளிமையாக சொல்லி தருவது பிடித்தது, எனக்கு கூகிள் பண்ண அடுத்த மேட்டர் ரெடி.

இதோட நிறுத்தி இருந்தா....சரி சரி விதி வலியது.
பதினஞ்சு வருஷமாச்சு எங்க ஊரில் நான் தியேட்டர் பக்கம் போய். எங்க ஊர் பொண்ணுங்க, பெரிய மனுஷி ஆனதும், "அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை. டெண்டுக்கொட்டகையை சற்றே upgrade செய்த நிலையில் இருக்கும் எங்க ஊரு தியேட்டருக்கு கணவரை அழைத்து போற அளவுக்கு தைர்யம் இல்லை என்பதாலும், பெரும்பாலும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முதலா போட்ட படங்கள் தான் எங்க ஊருல ரிலீஸ் ஆகிக்கொண்டு இருந்ததாலும் எனக்கு அங்க போகணும்ன்னு தோணினதே இல்லை. ஆனாலும் சமீப காலமா என் தம்பி ரொம்பவே பில்டப் கொடுத்தான். 'நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, புது படம் ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஊருலயும் ரிலீஸ் பண்றாங்க.DTS பண்ணிட்டாங்க" அப்டி இப்டின்னு ரொம்ப தாளிச்சுட்டு இருந்தான். சரி இந்த வாட்டி போய் பாத்துடறதுன்னு ஒரு முடிவெடுத்தாலும், "இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்"  கிண்டலை எல்லாம் துச்சமென தள்ளிட்டு கிளம்பியே விட்டேன்.கூடவே ரஸ்க் சாப்பிட இன்னும் நாலு பேரை சேத்துக்கிட்டேன்.

Scooty park பண்ண போன எடத்துல எனக்கு மொத அதிர்ச்சி, பத்து ருபாய் ஒரு வண்டிக்கு. Fame லையே அவ்ளோ தான்.
உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க"
ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?
"நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.
'டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' என்று கணக்கு போட்டு வெறும் இருநூறு ரூபாயோட போய் இருந்தேன்.
"நூறு ரூபாய நீட்டி அஞ்சு first class டிக்கட் குடுங்க"ன்னதும்,டிக்கெட் குடுக்கறவர் டென்ஷன் ஆயிட்டார்.எனக்கு ரெண்டாவது அதிர்ச்சி.
எங்க ஊரு தியேட்டர்ல டிக்கெட் அம்பது ரூபாயாம். தம்பிகிட்ட அம்பது ரூபா கடன் வாங்கி,அஞ்சு டிக்கெட் எடுத்து உள்ள போனோம்.
தியேட்டர் சீட்டெல்லாம் கூட மாறலை. DTS மாத்திரம் புதுசு.
"நீ கடைசி கடசியா நாட்டாமை பாக்க வந்தப்போ இங்க தான்டி உக்காந்த" விட்டா என் தம்பி 'போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.

இந்த படத்தை பத்தி ஏற்கனவே நெறைய பேரு FIR போட்டுட்டாங்க. படத்தை பத்தி எனக்கும் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா படம் பாத்தப்போ நடந்த சில விஷயங்களை மாத்திரம் பகிர்ந்துக்கிறேன்.

-படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.

-"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.

-இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".

-காலைலேர்ந்தே நான் எங்கயோ கிளம்பறத மோப்பம் பிடிச்சு, "என்னை விட்டுட்டு எங்கம்மா போறீங்க?" ன்னு கேட்டுட்டே இருந்த அர்ஜுனை பிளான் பண்ணி வீட்டுல தூங்க வைச்சு விட்டுட்டு போன எனக்கு கடவுளா பாத்து பண்ண விஷயம். முன் சீட்டு பெண்மணி தன்னுடைய மூணு வயசு பையனை பாத்துக்கற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டு இன்டர்வல்ல சமோசா வாங்க போய்டுச்சு. அந்த பையனா, 'அப்பாடா பூச்சாண்டி போயிட்டான்'னு குஷில அங்க இங்க ஓடறது. அத அவங்கம்மா வர்ற வரைக்கும் சமாளிக்குறப்போ, "நல்லா வேணும்" ன்னு அர்ஜுன் ஞாபகத்துல வந்து சொல்லிட்டு போனான்.

-ஆமா இந்த படத்தை எல்லாரும் ஏன் இவ்வளோ திட்றீங்க? அம்பது ரூபாக்கு எவ்வளோ... பெரிய படம்? சான்சே இல்ல.படம் முடிஞ்சுடுச்ச்சுன்னு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நல்ல வேளை, பார்க்கிங் கிளியர் ஆகட்டும் ன்னு வெயிட் பண்ணதால சல்யுட் அடிக்கறதெல்லாம் பாக்க முடிஞ்சுது. இல்லன்னா முக்யமான சீன மிஸ் ஆயிருக்கும்.

நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் பார்க்க வேண்டியது. ஏதோ நல்ல நேரம்.பிளான் கான்செல் ஆனது. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்.

"ஏங்க வர வர சீரியஸ் பதிவு எழுதறீங்க? உங்க வழக்கமான போஸ்ட்லாம் எங்க?"
"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"

ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு.

Sunday 20 December 2009

நீங்கள் இடதா? வலதா?

உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.
மோஹன்லால் கமலிடம் சொல்வார்."நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்"
"oh எல்லாம் தெரியுமோ? உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா?"
"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல"
"ஏன் உங்களுக்கு இருக்கா? இல்ல எவனுக்கு இருக்கு? he was ambidextrous . unfortunately i am in that strand too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.

என்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.

ambidextrous ன்னா என்ன? காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous?
ஏன் இடது? ஏன் வலது ? இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.

ambidextrous என்பதற்கு "தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.

புராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.

மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.

வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.
தேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

"ska.nda iti abruvan devaaH skannam garbha parisravaat |
kaartikeyam mahaabaahum kaakutstha jvalana upamam ||"
- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம்

"And gods called that boy, oh, Rama of Kakutstha, whose glow is like that of flaring fire and who is ambidextrous as 'Skanda' for he slid down from the secretions of a womb.

கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.

Ambidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை. ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். "அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால மகாவிஷ்ணுவுக்கு பரிசாக அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான்.

இந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா.
- அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.

இந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன்.


புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' ?

ambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது?

இடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.

Football முதலான விளையாட்டுகளில் left wing என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம்.
அட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா? binary மரத்தில்.


Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)

ஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist tree .As simple as that .

அரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா? பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், "எல்லாருக்கும் எல்லாமும்" என்ற 'equal rights'
கொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் "ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும்? என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.

இந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.
அது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா? வலதா?
அட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.

Friday 11 December 2009

பாட்டு போட்டி - 4

இது ஒரு லிரிக்ஸ் போட்டி.
பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.
பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.

1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".

2)"கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?"
என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)

3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய் மறையாதா நிறைத்திடு..."
குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.

4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."

5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க முகம்..."

6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?

Thursday 10 December 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன்


சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகததை பற்றிய எனது கருத்துகள் இட்லிவடையில் வெளிவந்துள்ளது.
வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.

Friday 4 December 2009

சைக்கிள்


எந்த வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில், சொல்லிக்கொடுத்து கொண்டிருந்த என் சித்தி பின்னால் பிடித்து இருந்த பிடியை விட்டு விட, நானும் நேராக போய்க்கொண்டே இருந்ததும்,ஒரு இடத்தில் 'திருப்பு திருப்பு' என்று சித்தி கத்தியதை கேட்டு, 'ஹான்ட் பாரை திருப்பனுமா ??'என்று நான் திரும்பி பார்த்து கேட்டதில் balance தடுமாறி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டோரம் இருந்த சாக்கடையில் விழுந்ததும் மறக்கவே இல்லை.

நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டதும் எங்கள் ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மணிக்கு ஒரு ரூபாய். லேடீஸ் சைக்கிள் என்றால் இரண்டு ரூபாய். சனி ஞாயிறு மாலைகளில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வீட்டு முன் உள்ள திட்டானியில் சுற்றி சுற்றி ஓட்டுவது வழக்கம் ஆனது.அதிலும் அப்படி சுற்றி ஓட்டும்போது திரும்ப வேண்டிய இடங்களில் லாவகமாக திரும்புவது ரொம்ப பெருமையா இருக்கும்,பக்கத்து வீட்டு வெங்கிடு அண்ணா, அவனோட தம்பி செந்தில், தங்கை செல்வி, என்னோட தம்பி எல்லாரும் தான் என்னோட சைக்கிள் சாகசத்துக்கு ஆடியன்ஸ். ஒரு கையை விட்டு விட்டு ஓட்டுவது, ரெண்டு கையையும் விட்டு ஓட்ட முயற்சிப்பது, வேகமா பெடல் பண்ணிட்டு அப்புறம், காலை பெடலில் இருந்து எடுத்து விடுவது, இப்படி ஒரு மணி நேரமும் ஒரே த்ரில்லிங்கா இருக்கும் ...

ஏழாவது படித்து கொண்டிருந்தேன். என் கசின் ஒருத்தி திடீர் என்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஸ்கூல்க்கு வந்தாள்.அவளுடைய மாமா வாங்கி கொடுத்து இருந்தார். சிவப்பு கலர் கேப்டன் லேடீஸ் சைக்கிள். அன்றிலிருந்து எனக்கு சொந்தமாக சைக்கிள் வாங்கி அதில் பின்புறம் கேரியரில் புத்தகப்பையும், முன்னால் ஹேன்ட் பாரில் சாப்பாடு பையும் வாட்டர் பாட்டிலும் தொங்க விட்டுக்கொண்டு ஸ்கூல் போவதாக கனவு வர ஆரம்பித்தது. பாவம் எனக்கு மாமா வேற இல்ல. எங்க அம்மா கூட பொறந்ததெல்லாம் தங்கைகள். ஒரு வழியாக அரையாண்டு தேர்வு, இலக்கிய மன்ற போட்டி என்று நிறைய சாதனைகளுக்கு பிறகு, வீட்டில் எனக்கு சைக்கிள் sanction செய்யப்பட்டது.


BSA SLR . மெரூன் கலர். கேப்டன் சைக்கிள் சினேகா ரகம் என்றால் , BSA SLR ஐ கரீனா கபூர் ரகம் என்று சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட் சைக்கிளாக இல்லாமல் உயரமாக,ஸ்லீக்காக இருக்கும்.ப்ரேக் வயர் வெளியில் தெரிவதே ஒரு தனி ஸ்டைல். சைக்கிள் செயின்க்கு ஒரு பக்கம் மட்டும் தான் கவர் இருக்கும். செண்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு மட்டும் தான். நிறுத்தி வைத்து இருக்கும் போது ஒயிலாக சாய்ந்து நிற்கும்.இப்படி எல்லா விதத்திலும் (பின்?)நவீனத்துவம் வாய்ந்த மாடல். "பார்க்க அழகா தான் இருக்கு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்குமா(உன் வெயிட் தாங்குமா?)" என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி அது தான் வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. நாலு நிமிடத்தில் குறுக்கு வழியில் போய் விட முடிந்த பள்ளிக்கு, சுற்றிக்கொண்டு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா போய் வெச்சு இருக்கா? பப்பி உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்.சனிக்கிழமை தோறும் நான் தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ சைக்கிள் கழுவுவது தவறாது. முதலில் ஒரு காய்ந்த துணி வைத்து தூசி எல்லாம் துடைத்து பிறகு ஒரு ஈர துணியில் துடைத்து, மறுபடி காய்ந்த துணி வைத்து துடைத்து,செயின்க்கு எண்ணெய் போட்டு,பளபளவென்று மணப்பெண் மாதிரி ஆக்கி விடுவேன்.

அந்த வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள். அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு இயக்கம் இயங்கி வந்தது. அதில் "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலுடன் ஒரு கான்செப்ட் வரும். அதற்கு நானும் என் சைக்கிளும் தான் மாடல்(கள்).ஹிந்தி டியூஷன், பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு டியூஷன், கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும் போது நண்பர்கள் வீடுகள், இப்படி எங்கு செல்வதற்கும் எனக்கு ஒரு துணைக்கு ஆள் போல் ஆகி போனது என் சைக்கிள். ஆனால் ஒரே ஒரு சிரமம் தான்.சைக்கிள் வந்த பிறகு என் தம்பியையும் மிகவும் மதிக்க வேண்டியது கட்டாயமாகி போனது எனக்கு. அவனுக்கு என் மீது கோபம் வரும் போதெல்லாம், சைக்கிளில் ரெண்டு டயரும் காத்து இறங்கி போய் நிக்கும்.ஏதாவது ஒரு இடத்தில் பெயிண்ட் சுரண்ட பட்டு இருக்கும்.


2001 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாள்.
அப்போது வரைக்கும் சைக்கிள் என்று நினைத்தாலே இதமாக மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்த என்னை, கலவரமாக்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது அன்று.டைடல் பார்க்கில் ஆபீஸ். வேளச்சேரியில் தங்கி இருந்தேன். ஒரு VIP வீட்டில் இருந்து மூன்றாம் வீடு எங்கள் ஹாஸ்டல்.அதனால் எப்போதும் வெளிச்சமாக செக்யூரிட்டியோடு இருக்கும் தெரு. பொதுவாக நான் நிமிர்ந்து நேராக பார்த்து கொண்டு தான் நடப்பேன். பாரதியார் சொன்னதற்காக இல்லை. ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்து கற்றுக்கொண்டது. ஒன்பதாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தந்த ஒரு கன்னியாஸ்திரீ. இவர்கள் நடக்கும் போது நேர்கொண்ட பார்வையுடன், கால் மட்டும் தான் நகரும். மற்றபடி ஒரு விறைப்போடு ஏதோ சிலை ஒன்று நடந்து போவதை போல் இருக்கும். நடையில் ஒரு தன்னம்பிக்கையை பார்த்தது இவர்களிடம் தான். நீங்கள் ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்ததில்லை என்பதால், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "வீர் ஜாரா" படத்தில் பாகிஸ்தானி வக்கீலாக வரும் ராணி முகர்ஜி நடப்பதை போல். சிஸ்டரை போல நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரவழைத்துக்கொண்டேன். நேரான பார்வையுடன் நிமிர்ந்த நடையை. ஆனால் அன்றைக்கு ஏதோ ஆபீசில் மூட் அவுட். ஏதோ யோசனையில் குனிந்து கொண்டே நடந்து போய் கொண்டு இருந்தேன். எதிரில் வந்த சைக்கிளை உணர்வதற்குள், சைக்கிளில் இருந்த ஆசாமி என் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்து விட்டான். அதிர்ச்சியில் கத்த கூட தோன்ற வில்லை எனக்கு. சரி அவன் என்ன ஆனான், செயின் என்ன ஆனது,இல்ல,என் கழுத்து தான் என்ன ஆனது என்பதெல்லாம் இப்போ தேவை இல்லாத விஷயம். ஆனால் அன்றிலிருந்து குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளை பார்த்து கூட பயப்பட ஆரம்பித்தேன். ஒரு போபியா.அதிலும் ரோட்டில் நடந்து போகும் போது, பகலில் கூட எதிரில் யாராவது சைக்கிளில் வந்தால், Freeze -release விளையாடும் போது யாரோ என்னை freeze சொல்லிவிட்டதை போல், ஆடாமல் அசையாமல் நின்று விடுவேன். அந்த சைக்கிள் கடந்து போன பிறகு தான் எனக்கு உணர்வு திரும்பும்.

இது இப்படி இருக்க, போன வாரத்தின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, எதிரில் ஒரு சைக்கிள். அந்த சைக்கிள் என் பக்கத்தில் வந்த அந்த நொடியில், எனக்கு தூக்கி வாரிப்போட, "ஆஆஆ" என்று போட்டேனே ஒரு சத்தம். சைக்கிளில் வந்தவர் பெரியவர், பாவம், நிறுத்தி இறங்கிவிட்டார்.

"ஏனு ஆகித்தம்மா?" என்னை விட அதிக பதற்றம், அவருடைய முகத்தில்.
மண்டையில் அடி பட்டு பழச மறந்தவங்களுக்கு மறுபடி அடி பட்டால், தெளிஞ்சுடுமே, அதே மாதிரி அந்த "ஏனு ஆகித்தம்மா"வில் தெளிந்தது எனது போபியா.
"ஒன்றுமில்லை, சாரி". சங்கடமாக நகர்ந்து விட்டேன்.

ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்.