Thursday 26 February 2009

நான் தனியாள் இல்ல!!!

"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? அதுல செலவு பண்ற நேரத்துல இன்னும் கொஞ்சம் standards படிச்சுருந்தாலோ, இன்னொரு scripting language கத்துட்டு இருந்தாலோ, இல்ல அட்லீஸ்ட் MS.Office applications ல எத்தனை மாயாஜாலம் பண்லாம்?? அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுருந்தாலோ, வேலைக்கு உதவியா இருந்து இருக்கும்"


"வாழ்க்கைல பண்ற எல்லாம் விஷயங்களும் materialistic ஆக, measurable output குடுக்குறதா தான் இருக்கணுமா? நமக்கு பிடிச்ச, நமக்கு satisfaction தர்ற , விஷயங்கள், அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாத வரைக்கும், பண்றதுல என்ன தப்பு இருக்கு?அப்டியே measurable output தான் வேணும்னா கூட, இங்க வந்ததுல நான் எவ்ளோ நண்பர்களை சம்பாதிச்சுருக்கேன் தெரியுமா?"


"எங்க அவங்கள பத்தில்லாம் சொல்லு பாக்கலாம்"




ஜெயஸ்ரீ
ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி எனக்கு ஜெயஸ்ரீ. (அதுக்காக டைப் பண்ற வெரலை எல்லாம் வெட்டி அனுப்புன்னு சொல்லிடாதீங்க J!)அதிகமா பேசி பழகிக்காமலேயே இவங்க பதிவுகளை படித்தே, எழுத கத்துக்கிட்டேன்.
இவங்களுடைய 'மீண்டும் ஒரு காதல் கதை'யை படிச்சு, "இப்டில்லாம் கூட எழுத முடியுமா?' என்று மருகி, உருகி இருக்கிறேன்.ஒவ்வொரு முறை அந்த கதையை படிக்கும் போதும்(ஆச்சு இதோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு முறை), முதல் தடவை படித்த போது கிடைத்த அதே சந்தோஷமும் நிறைவும் கிடைக்கும். நம்மளும் தமிழ்ல எழுதணும் ன்னு எனக்குள்ள ஒரு சின்ன ஆர்வம் துளிர் விட்டுச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவங்க தான் காரணம்.முதல் தமிழ் பதிவா அர்ஜுன் பதிவை எழுதி இவங்களுக்கு (இவங்க பதிவிலேயே பின்னூட்டமாய்) அனுப்பிட்டு, "Ultra sound scan result' க்கு காத்திருந்த அதே தவிப்புடன் காத்திருந்தேன். ஒரு smiley யும், "ஆங்கில வார்த்தைகளை குறைத்து கொள்ளுங்கள் " என்ற கருத்தும் மறுமொழியாய் வந்தது. இவங்களுக்கு தனிமடல் அனுப்பிட்டு , பதில் வருமா வருமா என்று நொடிக்கொரு தடவை inbox ஐ refresh பண்ணி பாத்துட்டு இருப்பேன். முதல் மடலுக்கு மூணு நாள் கழிச்சு பதில் வந்தப்போ, "you made my day" ன்னு கத்தணும் போல இருந்துச்சு. யாருக்காவது ரசிகையா இருக்கதுன்னா இது தானா??? ன்னு நெனைச்சுக்கிட்டேன். எனக்கு வரும் தனிமடல்களுக்கு எல்லாம் நான் உடனுக்கு உடன் பதில் எழுதுவதற்கு அன்னைக்கு இவங்க கிட்ட இருந்து எனக்கு பதில் வந்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் தான் காரணம். கொஞ்ச நாள் தாளிக்காமல் இருந்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்து, எங்கள் வயிற்றில் எல்லாம் பதிவு வார்த்து இருக்கிறார்கள். எனக்கு இட்லிவடை தான் இவர்களை அறிமுகம் செய்து வெச்சது. அதுனால IV க்கு கடமை பட்டுருக்கேன்.:-)சமீபத்தில் "உங்கள் நான் கடவுள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். உங்கள் தமிழில் நல்ல வளர்ச்சி" என்று இவரிடம் இருந்து வந்த மடலை பார்த்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் அறிவித்த போது துள்ளியதை விட கொஞ்சம் அதிகமாகவே துள்ளியது மனது. பின்ன ?? சும்மாவா??சமீபத்தில் இவங்க "விகடன் வரவேற்பறை" ல வந்தப்போ, "Better late than never" என்று தான் தோன்றியது. She deserves it.



தேசிகன்
ஜெயஸ்ரீயின் பதிவுகளில் அடிக்கடி இவருடைய பெயர் தென்படும். அதனாலேயே இவரை ஏற்கனவே தெரிந்த மாறி உணர்வு, இருந்தாலும் இவரை பற்றி ரொம்ப curious ஆக்கியது இந்த பதிவு தான். ஒரு நாள் ஒரு வேலையாக ஆபீஸ் mail-room க்கு போய், அன்றைக்கு வந்து இருந்த தபால்களில் எனக்கு வர வேண்டியது வந்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்த போது, post from NHM to N.Desikan. NHM கிழக்கு மக்கள் ஆச்சே...அப்போ இவர் அந்த தேசிகனா இருக்குமோ என்று மண்டைக்குள் லைட் எரிந்தது. வந்து அவசரமா அவருடைய contact details தேடி, IM ல ping பண்ணி, நீங்க தானா அவர் என்று உறுதி செய்து கொண்டு, "ஓ, நீங்க ஏழாவது மாடியா? நான் மூணாவது..." என்று சந்தித்தும் ஆகி விட்டது. அது வரைக்கும் அவர் ஒரு பதிவர் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எனது அறியாமைக்கு , அவரை சந்தித்த பிறகு தான், "He is much more than just a blogger" என்று தெரிந்தது.ஆனால் மனிதர் மிக மிக எளிமை. அவருடைய படைப்புகளை பற்றின பெருமையோ, "சுஜாதா' அவர்களுடன் ,அவர் பகிர்ந்து கொண்ட நெருக்கமான நட்பை குறித்த கர்வமோ துளியும் இல்லை அவரிடம்.

"நீங்களும் பதிவு எழுதுகிறீர்களா? " என்று கேட்டு பதிவு முகவரி வாங்கி கொண்டார். சற்று தயக்கத்துடன் தான் கொடுத்தேன். ஆனாலும் இவர் எங்கே இதை எல்லாம் படிக்க போகிறார், ஒரு courtesy க்காக கேட்டு இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து அதை விமர்சித்து குறை நிறைகளை சுட்டி காட்டும் போது உண்மையிலேயே "அட" என்று இருக்கும் Three in one க்கு "Its interesting for a casual reading, but something is missing" என்று சொன்னவர், "கருவாச்சிக்கு" "Not bad" என்றும், கோயில் கொஞ்சம் பதிவுக்கு "one of the good posts, well written with with subtle humour" என்று சொல்லவும்... ஹையா நான் வளர்கிறேனே மம்மி!!!


"5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்" என்று கோயில் கொஞ்சம் பதிவில் நான் எழுதிய வரிகளை 'I am tempted to rewrite this' என்று சொல்லி, "எங்கள் வீட்டு சோபாவில் அன்று தான் மாமியார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து உட்காரலாம் என்று கண்டுபிடிச்சோம்.மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி என்று சோபாவும் சேர்ந்து சீரியல் பார்த்தது. மாமனார் சபாநாயகர் போல் தனி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார். இவர்களை பார்த்து நான் அசந்து போயிருக்க இவர்கள் அசராமல் மேகலாவிலிருந்து சிவசக்தி வரை பார்த்தார்கள்" என்று எழுதி காட்டி அசத்தினார்.

பேசாம இந்த சாப்ட்வேர் ஐ எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, "எழுத போங்க, இல்ல வரையுங்க" ன்னு சொன்னா, "இது 'புவ்வா' வுக்கு, மத்ததெல்லாம் பொழுது போக்கு" ன்னு சொல்கிறார்:-)

ச.ந.கண்ணன்.
இட்லிவடையில் எனது ஐந்தாண்டு பதிவை பார்த்து, "யார்டா இது?" என்று என் பதிவை எட்டி பார்த்தவர். கிழக்கில் எழுத்தாளர். அப்போலேர்ந்து தொடர்ந்து எனக்கு "எழுதுங்கள் எழுதுங்கள்" என்று ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பவர்.சில நாட்கள் பதிவு போடலன்னா, "அம்மா தாயே, பதிவு பிச்சை போடுங்க" என்ற அளவுக்கு இறங்குவதும், பதிவு பிடிச்சுருந்தா அத ஊரு உலகத்துக்கு எல்லாம் தெரிய படுத்துவதும், பிடிக்கலைன்னா, "Not impressive at all" என்று வெளிப்படையாக குட்டுவதுமாக, என் பதிவின் ஒரு முக்கியமான விமர்சகர். சமீபத்தில் இட்லிவடையிடம் வாங்கி கட்டி கொண்டார். எனக்கு என்னமோ அது கண்ணனுக்கு கிடைத்த விளம்பர வாய்ப்பாகவே தோன்றியது.:-)


இவங்க மட்டுமா?
எந்திரன், சர்வம் என்று ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்க படங்களோட stills, அப்றோம் ஒலகத்துல எந்த நடிகை, நடிகருக்கு கல்யாணம்,காது குத்து, குழந்தை என்று எந்த நல்ல காரியம் நடந்தாலும், அந்த photos எல்லாத்தையும், எங்க இருந்தோ ஆட்டைய போட்டு forward செய்யும் அன்பு சகோதரி ராஜி(ஒரு சினிமா மலர் ஆரம்பிக்க சொல்லி suggest பண்ணிருக்கேன்) , பொறக்கும் போதே காமெராவும் கையுமா தான் பொறந்து இருப்பாங்களோ ன்னு நெனைக்கற மாறி படம் எடுக்கற maddy & truth, அழகாக இருக்கும்/எழுதும் மது, கம்ப்யூட்டர் பத்தி என்ன கத்துக்கிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் Rethanya, straight பஸ் இருந்தாலும் எறங்கி எறங்கி ஊருக்கு போற கதிர்,(எங்க வீட்டு கதிர் அதுக்கு opposite, straight பஸ் இல்லன்னா அந்த ஊருக்கே போக மாட்டார்), மனைவிய வீட்டுல விட்டுட்டு படம் பாக்க போறதுக்கு பிளான் போடற விஜய், வாலிபர்சங்கம் ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெறுமனே ஜாலி பண்ணாம, ஆழ் கிணருல விழுந்து இறந்த பையனை பற்றி பதிஞ்ச சரவணன், எல்லாரும் மும்முரமாக நான் கடவுள் விமர்சனம் எழுதும் நேரத்தில்,தான் மட்டும் வித்தியாசமாக விமர்சனம் எழுதின எல்லாரையும் விமர்சிச்ச மணிகண்டன், இப்டி நிறைய பேர்.


"ஒரு கும்பலா தான் கெளம்பி இருக்கீங்க, எப்டியும் போங்க"

Wednesday 18 February 2009

I am turning TWO!!!





மாமா,சித்தி, எல்லாருக்கும் வணக்கம்.

எங்க அம்மா எழுதுறத எல்லாம் மதிச்சு படிச்சு கமெண்ட்டும் போட்டு, அவங்கள ரொம்ப ஏத்தி விட்ருக்கீங்க, ஏதோ பெரிய எழுத்தாளர் range க்கு அவங்க போடற சீன் தாங்கல. ஏதோ 'best seller' எழுதிட்ட மாதிரி கனவுல மேல பாத்துக்கிட்டே நடந்து போயி கால்ல இடிச்சுட்டு வேற வந்துருக்காங்க.




தினமும் காலைல ஒம்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கெளம்பி, 'அம்மா ஆபீஸ் போறேன் செல்லம், சாயங்காலம் சீக்ரம் வரேன், சமத்தா இரு" அப்டின்னு சொல்லிட்டு போயிட்டு நைட் எட்டு மணிக்கு தான் வராங்க. என் கூட விளையாடறதே இல்லை. இதுல இப்போ கால்ல கட்டு வேற. இதுல நான் எங்கயாச்சும் போய் இடிசுக்கிட்டேன்னா "இவ்ளோ பெரிய(?) புள்ளை ஆயிட்டே? பாத்து நடக்குறது இல்லையா?" ன்னு வேற கேக்குறாங்க.என்னத்தை சொல்ல?

அர்ஜுன் ரகளை பண்ணான், அது இது ன்னு என்னை பத்தி கம்ப்ளைன் மட்டும் உங்க எல்லார் கிட்டயும் சொல்லுறாங்க. அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் சேந்து என்னை பாடா படுத்தி வைக்குரத பத்தி இது வரைக்கும் உங்க யார் கிட்டயும் மூச்சு விடலை...அதான் நானே பொங்கி எழுந்து வந்துட்டேன்,
போன ஞாயித்துக்கெழமை நானே செம பசில இருந்தேன், எனக்கு சாப்பாடு கொடுக்கிறேன் பேர்வழின்னு சுட சுட சாப்பாடை என் வாயில போட்டு நான் அழுது வாந்தி எடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டேன். சரி அம்மா தான் இப்டின்னா எங்கப்பா நேத்து நைட் நான் பெட் ல தண்ணி கொட்டிட்டேன்னு ஒரு சப்ப மேட்டர் க்கு என்னை திட்டிட்டாரு. நான் திரும்ப அழுதேன், திரும்ப வாந்தி எடுத்தேன்.
யாராச்சும் கொஞ்சம் இவங்களை என்னன்னு கேளுங்க.

அப்றோம் நான் முக்யமா உங்ககிட்ட சொல்ல வந்தது என்னன்னா, என் செல்ல அம்மாக்கு நான் புள்ளயா பொறந்து நாளையோட ரெண்டு வருஷம் ஆகுது.

On this special day, I sincerely thank all my mom's readers / well wishers and needless to say that I seek all your hearty blessings.

Monday 16 February 2009

பட்ட கால்லயே படும்.

வெள்ளிக்கிழமை பெப்ரவரி 13 காலை 9:30

உலகத்தின் பெரும்பாலான கதவுகள் தள்ளி திறக்கும் விதத்தில் தான் இருக்கும். எங்க அலுவலகத்தின் ஓர் கதவு, அதுவும் கண்ணாடி கதவு, அதுக்கு மட்டும் விதி விலக்காக இழுத்து தொறக்கற மாறி வெச்சுருக்காங்க.
அந்த விதிவிலக்கு எனக்கு விதியாக போனது...

ஒரு மீட்டிங் க்கு நேரமாகிவிட்ட அவசரத்தில், வேகமாக நான் அந்த கதவ இழுக்க போக, டக் ன்னு ஒரு சத்தம், எங்கோ எதுவோ வலிப்பதை மாறி ஒரு உணர்வு. இருந்தாலும் பின்னாடி வந்தவங்களுக்கு எல்லாம் அங்க எந்த சம்பவமும் நிகழாத மாறி ஒரு feel குடுத்துக்கிட்டே நான் என் desk க்கு வந்து சேந்து குனிஞ்சு பாத்தா....,ஐயய்யோ என்னது இது ஒரே செவப்பா இருக்கு.என் வலது கால் பேரு விரல் நகம் பெயர்ந்து ரத்தம் வழிஞ்சுக்கிட்டுருக்கு.... கதவின் கீழ் முனை இடிச்சுருக்கு. உடனே கெளம்பி மெடிக்கல் ரூம் போனேன்.
"A glass door hit me....etc etc..."
"Its bleeding badly, u better take A TT shot"

என்னது ஊசியா? அர்ஜுன் பொறந்த அப்றோம் அந்த பக்கமே போனது இல்லையே.சரி வேற வழி இல்ல,
"Ok you give it"

நர்ஸ் ஊசி போட்டு காலில் கட்டு போட்டு விட்டு, "you better check the condition of the nail tomorrow" ன்னு சொல்லி அனுப்பிச்சுடாங்க.
நம்ம டீம் மக்கள், ஒவ்வொருத்தரா வந்து என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு, நான் பதில் சொல்லி, அவங்களும் ஜோக் அடிப்பதாக நெனச்சு, "கதவுக்கு ஒண்ணும் ஆகலையே" ன்னு கேட்டு and so on.
தலைவருக்கு போன் போட்டு விவரத்தை சொன்னா, எனக்கு ஏதோ எறும்பு கடிச்சு, அதுக்கு நான் போன் பண்ணிருக்கேன் அப்டிங்கற மாதிரி reaction.
இந்த situation க்கு எல்லாம் இருக்கவே இருக்காங்க எங்கம்மா ன்னு ஒரு போன் போட்டு அம்மா கிட்ட அம்மாஆஆஆ நீ சுமந்த பிள்ளை...சிறகொடிந்த கிள்ளை....,
"தண்ணி படாம பாத்துக்கோம்மா,ரொம்ப நடக்காதம்மா"....எல்லாம்...:-)



சாயங்காலம் அன்னைக்கின்னு எனக்கு வேலை பிச்சுகிட்டு போக, வீட்டுல drop பண்ண முடிஞ்சா எந்த colleagues கூடவும் கெளம்ப முடியாம போயி, எப்டியோ நொண்டி நொண்டி வீட்டுக்கு போயி சேந்தேன்.

சனிக்கிழமை பெப்ரவரி 14 காலை 7:30
------------------------------------
எந்திரிச்சு மெது மெதுவா பாத்ரூம் க்கு போற வழில கால்ல ஒரு இடி இடிச்சு, அம்மா ன்னு கத்த வந்தத அடக்கி, (நான் கத்தினா பின்னாடியே என் பையன் அம்மான்னு கத்திட்டு முழிச்சுடுவானே...) உள்ள நொழஞ்சா, கண்ணாடி ஸ்டாண்ட் ல பச்சை கலர் ல ஒரு குட்டி பெட்டி. பாக்குறதுக்கு நகைப்பெட்டி மாறி இருக்கு.
"அட நம்ம ஆளு எப்போலேர்ந்து இவ்ளோ romantic ஆ மாறினாரு? Valentines day க்கு ஏதோ surprise gift லாம் வாங்கி வெச்சுருக்காரே?, என்னவா இருக்கும் , தோடா மோதிரமா??" ன்னு கதவுல இருந்து கண்ணாடிக்கு போறதுக்குள்ள, (நொண்டி நொண்டி போறதுக்கு டைம் ஆகும் ல...) யோசிச்சுக்கிட்டே போயி அந்த பெட்டிய தொறந்து பாத்தா, "படுபாவிங்க, odonil க்கு எவண்டா இப்டி ஒரு பெட்டிய டிசைன் பண்ணீங்க??"
காதலர் தினத்துக்கு பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட காதலர்களே...நல்லா இருக்கப்பு!!!


காலை 10:30

டாக்டர் கிட்ட கொண்டு போயி கால காமிச்சு, again "I got hit at A glass door etc...etc"
கட்டை பிரிச்சு பாத்துட்டு, "பாதி நகம் ஏற்கனவே பேந்துடுச்சு. மொத்தத்தையும் எடுத்துடறது தான் நல்லது, Its A painless procedure, ஊசி போட்டு அந்த இடத்தை numb பண்ணிடுவேன், அதுக்கு அப்றோம் அந்த வெரலையே எடுத்தா கூட(??), வலிக்காது.என்ன சொல்றீங்க? "
நான் பரிதாபமா அவர பாக்க, "you carry on டாக்டர்"

"அட பாவி உங்களுக்கென்ன போச்சு? "

நகம் எடுக்கும் போது வலிக்காதுன்னு தெளிவா சொன்ன அந்த டாக்டர், anesthesia ஊசிய நகக் கண்ணை சுத்தி ஒரு அஞ்சாறு தடவ குத்த போறத பத்தி மறச்சுட்டார்.
அந்த காலத்துல எல்லாம் குற்றவாளிகளுக்கு, நகத்தை பிடுங்கி தண்டனை கொடுத்த காரணம் நல்லாவே வெளங்கிடுச்சு சாமி. வலியா அது? எழுத்தில் கொண்டு வர முடியாது.


அவர் எனக்கு ஊசி போடறப்போ ஆஆஆஆ!!!!!!! ன்னு ஒரு சத்தம்.பாத்தா அம்மாக்கு ஊசி போடறாங்களேன்னு என் புள்ள அழுவுறான். உலகத்துல நம்ம அம்மாக்கு அப்றோம் நமக்கு ஒண்ணுன்னா துடிச்சு போறது நம்ம புள்ள தான்.

ஒரு வழியா நகத்தை பிடுங்கி, கட்டு போட்டு விட்டார். வீட்டுக்கு வந்து பாத்தா லிப்ட் work ஆகலை. எத்தி எத்தி நாலு மாடி ஏறி வீட்டுக்கு போயி, சக்கரக்கட்டி படம் பாத்தேன்.I-pod ல பாட்டு கேட்டுகிட்டே இருக்கப்போ, டாக்ஸி டாக்ஸி , சின்னம்மா சிலக்கம்மா tracks லாம் வந்துச்சுன்னா என்னை அறியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா என்னவோ இந்த பாட்டெல்லாம் நான் ஒரு வாட்டி கூட visuals பாத்தது இல்ல. படம் சரியல்ல ன்னு ஏற்கனவே கேள்வி பட்டு இருந்தாலும் இந்த பாட்டோட visuals பாக்கலாம் ன்னு படம் பாக்க உக்காந்தா, what A disappointment?
தல போட்டுக்குடுத்த tunes எல்லாம் எப்டி படம் ஆக்குறதுன்னு மணிரத்தினம், ஷங்கர் கிட்ட எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்குங்க டைரக்டர் சார்!

ஞாயிறு மாலை 6:30
--------------------------------
கலைஞர் டிவி யில் 'கடவுளின் குழந்தைகள்' என்று நான் கடவுள் குழுவின் கலந்துரையாடல். "படம் பாத்துட்டே ஒரு வாரமா எங்கயோ வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கே நீ! you better dont watch this" ன்னு சொல்லிட்டு போன அவருடைய எச்சரிக்கைய அலட்சியம் செய்து விட்டு பாக்க ஆரம்பித்தேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் தான் பாத்துகிட்டு இருந்தேன். ஆனா இளையராஜா வந்த உடன், பூஜா ஏதோ சொல்ல அதை புரிந்துகொண்டு மதுபாலா அவரை பாத்து கை கூப்பியதை பார்த்த பிறகு எனக்கு தாங்கலை. படம் பாக்குறப்போவே அவளை, அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிடுங்கி செல்லும் காட்சியில், "See it like A movie" என்று அவர் என்னை அழுகைய நிறுத்த சொன்னது ஞாபகம் வந்தது. ஆனாலும் நேத்து நைட் ஒரு ரெண்டு மணிநேரம் அழுது தீர்த்து முகம் வீங்கி இன்னைக்கு ஆபீஸ் வந்துருக்கிறேன். Especially, தாயான பிறகு இந்த கொடுமைகளை எல்லாம் தாங்க முடிவதில்லை.
கடவுளே! நீ எங்களுக்கு எதை புரிய வைக்க இவர்களை எல்லாம் படைக்கிறாய்?

என்னடா! வாரத்தின் முதல் நாள் வந்து இப்படி violin வாசிச்சுட்டேனே?? ஏதாவது மங்களகரமா முடிக்கணுமே பதிவ....Hmm...
Ok, என்னுடைய இந்த பதிவை tamilish இல் போஸ்ட் செய்து, அதுக்கு பத்து ஓட்டுகள் வேற கெடைச்சு, என்னுடைய பதியும் ஆர்வத்தை boost பண்ணிய ச.ந.கண்ணன் அவர்களுக்கு நன்றி மற்றும் திருமண வாழ்த்துக்கள்.




Monday 9 February 2009

அஹம் ப்ரம்மாஸ்மி



இது ப்ரியாவுக்கான படம் அல்ல.எனக்கு 'கண்ட நாள் முதல்' மாதிரி காமெடி வேண்டும், 'அலைபாயுதே' மாதிரி romance வேண்டும். 'Dil Chahta hai' மாதிரி emotions வேண்டும்.'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்' ,மாதிரி ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் சுவாரஸ்யம் வேண்டும். 'அழகன்','பார்த்தாலே பரவசம்' மாதிரி 'திரைக்கதை மாயாஜாலம்' வேண்டும். 'முந்தானை முடிச்சு', ஆராரோ ஆரிரரோ' மாதிரி முடிச்சுகள் போட்டு, அவைகளை அவிழ்த்திருக்க வேண்டும். 'ஆனந்தம்', 'ஆஹா' மாதிரி படம் முழுக்க நல்லவர்களாக இருக்க வேண்டும். அந்நியன்,'கில்லி' மாதிரி விறுவிறுப்பு இருக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் படத்தில் ரஜினி,கமல்,சிம்ரன் மாதிரி எனக்கு பிடித்த யாராவது படத்தில் இருந்தால் கூட போதும். ஒரே வரியில்,'படத்தில் யாருக்கும் ரத்தம் வர கூடாது'. அதனால் இது எனக்கான படம் இல்லை.

ஆனாலும் என்னில் இருந்து விலகி நின்று இந்த படத்தை பற்றின சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இது படத்தின் விமர்சனம் அல்ல. 'Bala ஒரு உலகத்தர இயக்குனர்', இளையராஜா ஒரு இசை மாமேதை' என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக எழுதுவதில் எனக்கு உடன் பாடில்லை. மேலும் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் என்ன நினைத்து அமைத்து இருப்பார் என்று நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா என்றே நான் இன்னும் யோசித்து கொண்டு இருப்பதால், அதை எழுத்தில் கொண்டு வருவது எனக்கு சுலபம் இல்லை.






நான் கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒருவன் உலகத்தில் வாழக்கூடாதவர்களுக்கு தண்டனையாக மரணத்தையும், வாழ முடியாதவர்களுக்கு அதே மரணத்தை வரமாகவும் அளிக்கிறான். இது தான் இந்த படத்தின் one liner.

Sify யின் 'Outstanding' rating க்கு ஒரு சகோதரர் இப்படி பதில் எழுதி இருந்தார். 'Bala is psychic'.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி. காசியில் எரியும் பிணங்களை ஆசீர்வதிக்கும் ஒரு அஹோராவையும், தென் தமிழ் நாட்டின் மலைக்கோட்டை கிராமத்தில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பற்றின உண்மைகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியில் நீங்கள் வேறு என்ன எதிர் பார்க்கிறீர்கள்? Andhra restaurant க்கு போய், 'ஒரு ஹைதராபாத் பிரியாணி - extra spice' என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு 'இது சரவண பவன் meals மாதிரி இல்லை' என்று complain பண்ணினால் தவறு யார் மீது சொல்லுங்கள்?'என் படம் இப்படி கனமாக தான் இருக்கும். பார்ப்பவர்களின் ஈரல்குலை நடுங்க தான் செய்யும் ' என்று ஏற்கனவே மூன்று முறை தெளிவாக சொல்லி விட்டார் அவர்.பிரியாணியில் சாம்பார் சுவை எதிர் பார்ப்பவனை பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ, அதே உணர்வு தான் பாலாவை psychic என்று சொல்லும் உங்களை பார்த்து எனக்கு வருகிறது.நந்தாவிலும்,சேதுவிலும் பிதாமகனிலும் 'பாசம்', 'நட்பு', 'காதல்' என்று சிலதை கலந்தவர், இப்படி முழுக்க முழுக்க வியாபார விஷயங்களே இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்றால், அது அவருடைய தன்னம்பிக்கை.
ஷங்கருக்கு ஒரு அம்பியையும், மணிரத்னத்துக்கு ஒரு மைக்கேலையும் காண்பித்து கொடுத்தவர் பாலா.தயவு செய்து அவரை திட்டாதீர்கள்.'Not my kind' என்று decentஆக விலகிக்கொள்ள மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது.

வசனம் ஜெயமோகன். பல மூத்த பதிவர்கள் 'பின்நவீனத்துவம்' என்று எனக்கு புரியாத ஒரு மொழியில் இவரை வாழ்த்துவதையும், வசைபாடுவதையும் படித்து இருக்கிறேன். வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது. நிறைய இடங்களில் சிரித்தேன்,பல இடங்களில் 'அட' என்று கை தட்டினேன்.நிறைய வார்த்தைகள் 'பீப்' ஆக மட்டுமே கேட்கிறது. சென்சார்?
ஒரு வேளை அது தான் பின்நவீனத்துவமா???

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். பாவம் இவருக்கு வேலை அதிகம் இருந்து இருக்கும்.ஷூட்டிங் முடிந்த சமயத்தில் பாலா நாலரை மணி நேரத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்று படித்த ஞாபகம். ரெண்டே கால் மணிநேரமாக குறைத்து இருக்கிறார். அந்த ஜெயில் குத்தாட்டத்தை வெட்டி இருக்கலாம், பாலா ரசிகனுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

ஆர்யாவின் உயரமும், உடல் மொழியும், ருத்ரன் கதா பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகின்றன. ஆனால் குரலில் ஒரு கம்பீரம் இல்லை. ஒரு வேளை, கஞ்சா அடிக்கும் குரல் இப்படி தான் இருக்கும் என்று பாலா நினைத்து இருப்பாரோ என்னவோ? இந்த வருடத்தின் தேசிய விருதுகளில் ஆர்யா, பூஜா இருவரும் இடம் பெறுவார்கள் என்றே நினைக்கிறேன்.

படத்தின் எந்த காட்சிகளில் எல்லாம் பார்ப்பவர்கள் பதற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாரோ, அந்த வேலையை பின்னணி இசை சரியாக செய்கிறது. பாடல்களை நான் இன்னும் சரியாக கேட்க வில்லை.

யாரோ இந்த படத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் Sify யில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதை வன்மையாக மறுக்கிறேன். 'வாழ்க்கையில் தான் எந்த முதலாளியின் கீழே பிச்சை எடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்ற choice கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்' என்ற பாடத்தை take-home ஆக கொடுத்து விட்டு இருக்கிறார் Bala. உதாரணத்துக்கு ஒரு வசனம், 'இவ பிச்சை எடுக்க மாட்டேன்னு முரண்டு பண்ணியதால் முதலாளி கல்லை எடுத்து இவ இடுப்பில் ஓங்கி அடிச்சு இவளை நடக்க விடாம பண்ணிட்டாரு, இதுக்கு தான் பொறக்கும் போதே என்னைய மாறி ஊனமா பொறக்கணும், அந்த விதத்துல நான் ராசிக்காரன்'.
இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு, புருஷன் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, அலுவலக பிரச்சினை எல்லாம் ரொம்ப silly ஆக தோன்ற ஆரம்பித்து விடும். என்ன, சில காட்சிகளில் மட்டும் கண்ணை மூடி கொள்ள வேண்டும். அல்லது துடைத்து கொள்ள வேண்டும்.

On the lighter side,
பாலா உங்களுக்கு குரல்வளை என்றால் என் இவ்வளவு பிடிக்கிறது?

பின்குறிப்பு: வழக்கமாக செய்யும் எந்த நகைச்சுவை முயற்சியும், இந்த பதிவின் seriousness ஐக் குறைத்து விடக்கூடாது என்பதால் ரொம்ப conscious ஆக எழுதி இருக்கிறேன். உரைநடையில் எழுத முயற்சித்ததற்கும் அதுவே காரணம். அதனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் விட்டு போயின. அதை பின்னொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்.