Friday 25 January 2013

வருண் நித்யா காதல் சில தருணங்கள் - ஒரு டக் பதிவு

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது (இரு இரு...இதே மாதிரி தான விண்ணை தாண்டி வருவாயா பட  விமர்சனத்துக்கும் எழுத ஆரம்பிச்ச?
அட படமே அதே மாதிரி இருக்கப்போ பதிவு இருக்க கூடாதா?)

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது.
இப்ப வர்ற தமிழ் படங்களில் காதல் இருக்கும் ஆனால் அது கூட சேர்ந்து நண்பர்கள், அண்ணன், தம்பி, தீவிரவாதி அல்லது குறைந்த பட்சம் ஒரு பேயோ,யானையோவாவது இருக்கும். இத மாதிரி எதுவுமே இல்லாம மைதிலி என்னை காதலி படத்தில் கதை, திரைக்கதை வசனம் டைரக்சன் இசை....etc என்று எல்லாமுமாக டி ஆரே இருப்பது போல இந்த படம் முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த திணையும் தான்.

வி. தா. வ, நீ.தா.என்.பொ. வ இந்த படமெல்லாம் பிடிக்க வேண்டுமானால்

1)நீங்கள் யூத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் காதலித்து இருக்க வேண்டும். காதல் என்றால் கல்யாணத்துக்கு அப்றோம் வரும் சுவலட்சுமி காதலோ அல்லது படிப்பெல்லாம் முடிச்சு தெளிவாகி வரும் அறிவு முதிர்ச்சி காதலோ அல்ல... பதின்ம வயதிலோ, இருபதின் ஆரம்பத்திலோ ஆன்ட்ரொஜண்/ ஈஸ்ட்ரோஜண் புரட்டி புரட்டி அடிக்கும் போது வரும் மடத்தனமான காதல். Mad love.

2)சந்தானம் சொல்ற மாத்தி தூக்கு போடறதுக்கு முன்னாடி மூஞ்சில கருப்பு துணி போட்டு மூடின மாதிரியான உணர்வை அனுபவிச்சு இருக்கணும்.

3)நித்யா மாதிரி "படிப்பு/ நண்பர்கள்/ எக்ஸ்ட்ரா கரிகுலர் என்ற எல்லா நிலைகளின் போதும் அவன் மட்டும் போதும்" என்பதே உங்களுக்கான தேர்வாக இருந்து இருக்க வேண்டும். (இதையும் தாண்டி நீங்கள் படிச்சு இன்னைக்கு வாழ்க்கைல தேறி இருந்தீங்கன்னா அது உங்க அதிர்ஷ்டம்/சாமர்த்தியம் )

4)வருண் மாதிரி ஒரு டெம்ப்ளேட் மிடில் கிளாஸ் குடும்பத்தின் "அத்தனைக்கும் ஆசைப்படு" க்கும், நித்யாவின் "நீ மட்டும் தான்
எனக்கு வேணும்" க்கும் நடுவிலான அவஸ்தையை பட்டு இருக்கணும்.

5)அழுகையின் ஊடே "என்னை சாவடிக்கற; you don't deserve my love' என்று ஒரு முறையேனும் நீங்க சொல்லி இருக்கணும்.

இதெல்லாம் பண்ணி இருந்தீங்கன்னா இந்த மடத்தனம்,அதிலும் இந்த மடத்தனத்த ஜீவா, த்ரிஷா, சமந்தா, சிம்பு (sans விரல் வித்த/பஞ்ச டயலாக்) செய்யறப்போ உண்மையிலேயே அது ரொம்ப அழகா தெரியும்...

-"மேல்போர்ன்ல எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா.அவட்ட சீக்கிரமா திரும்ப வர சொல்றியா" என்று வருண் சொல்றப்போ அவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒரு சிரிப்பு சிரித்து, "சரி சொல்றேன்"னு நித்யா சொல்லும் அழகியல் புரியும்.

-ஸ்கூல் சண்டை அப்போ திரும்பி போகும் நித்யா "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதே ன்னு மட்டும் சொல்லு" ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கும் போது இது ஏற்கனவே ரேவதி பேசின டயலாக் தான்னா கூட உங்களுக்கு பிடிக்கணும்... பிடிக்கும்.

-"அவனா நானா" "i don't want this sh*t anymore" என்று பொங்கும் வருணின் கோவம் புரியும்

-"சாய்ந்து சாய்ந்து" ன்னு ஆரம்பிக்கும் போதே..உங்களுக்குள்ள அடடா ன்னு இருக்கும்.

-"நீ தான விட்டுட்டு போன" ன்னு வருண் சொல்றப்போ "ஆமா" ன்னும் "நீ என்னை போக விட்டுருக்க கூடாது" ன்னு நித்யா சொல்றப்போ "ஆமா கரெக்டு" ன்னும் உங்க மனசு மாத்தி மாத்தி defense/prosecution ரெண்டுமே பண்ணும்.

-மொட்டை மாடில வெச்சு நித்யா "கடைசியா ஒன்னு பண்ணிடு வருண், என்னை விட்டுடு... ஏன்னா என்னால அது முடியாது" ன்னு சொல்றப்போ, எப்படி இருக்கும்ன்னு எழுத தெரியலை

-"நீ ஏன் கோச்சிங் சேரனும் உனக்கும் MBA படிக்க ஆசை இருக்கா? என்று கேட்கும் வருணிடம் "அங்கே நீ இருப்பேல்ல" என்று சொல்லும் நித்யா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரிய மாட்டாள்.

-படம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. க்ளைமாக்ஸ் மின்னலே வா, (தமிழ்) வி.தா.வ யான்னு உங்களுக்கு அப்படியே பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.

இப்படி தாறுமாறாக மடத்தனம் செய்து, இன்று வேலை, குழந்தைகள், ட்ராபிக் ஜாம் முதலான இத்தியாதிகளில் உங்கள் காதலிக்கும் நேரங்கள் தொலைந்திருப்பின் இந்த படத்தை பாருங்கள்...
இரண்டரை மணி நேர எக்ஸ்டஸி கேரண்டி.