Thursday 29 January 2009

கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு:-)


"When a woman gets married to a man, not only is she married to him, but to his whole family"

கடந்த வார இறுதியில் நான் உணர்ந்த உண்மை இது தான்.

ஜனவரி 26 அன்று என் மாமனாரின் அறுபதாவது பிறந்த நாள். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், அதை ஒரு பிறந்த நாள் விழாவாக மட்டும் அறிவித்து, உறவினரகள்
எல்லாரையும் அழைத்து ஒரு "Get together' வைக்கலாம் என்று கதிர் க்கு ஒரு ஆசை....என் மாமனாரும் மாமியாரும் வேண்டாம் என்று மறுக்க, என் முதல் நாத்தனாரும் 'ரொம்ப பெரிய அளவில் எல்லாம் ஏதும் செய்ய வேணாம், அப்டியே செய்தாலும் சொந்த ஊரில் செய்யலாம், பெங்களூரில் வைத்து நடத்தினால் எல்லாருக்கும் ரொம்ப சிரமம் ' என்றே நினைக்க, என் இரண்டாவது நாத்தனாரும், அவரும் பிடி பிடின்னு பிடிச்சு, விழா நடத்தியே ஆக வேண்டும் என்றும் , அதுவும் பெங்களூரில் எங்க வீட்டில் வைத்து நடத்துவதாகவும் argue பண்ணி ஜெயிச்சுட்டாங்க.....

முதல் சுற்று உறவினர்களை மட்டும் அழைக்கலாம் என்று யோசித்து, எல்லாருக்கும் சொல்லியும் ஆகி விட்டது......26th திங்கள் கிழமை என்றாலும், ஞாயிறு மாலை ஏழு மணிக்கு function என்று முடிவு செய்தோம்.

நாள் நெருங்க நெருங்க எல்லாருக்குமே ஒரே உதறல். அதாவது சொந்த ஊரில் ஒரு விழா வைப்பது என்பது வெகு சுலபம். அனைவரும் விழா நேரத்துக்கு சரியா வருவாங்க, வாழ்த்துவாங்க, சாப்பிடுவாங்க, கெளம்பிடுவாங்க.மாமியார் மாமனார் சென்னை ல வெச்சு நெறைய functions பண்ணிருக்காங்க.
அர்ஜுனின் பேர் வைக்கும் படலம் கூட சென்னை ல தான் நடந்துச்சு.சென்னை ல உறவினரகள் நெறைய பேர் இருப்பதால, நெறைய advantages. ஊர்ல இருந்து வர்றவங்களை, சென்னை ல இருக்க உறவினரகள் ஸ்டேஷன் ல இருந்து pick up பண்லாம்.அவங்க வீட்டில் தங்க வைத்து கொள்ளலாம்.இந்த மாதிரி...நெறைய உதவிகள் நமக்கு கெடைக்கும்.

ஆனா பெங்களுர் ல வெச்சு பண்றதுல logistics சிக்கல்கள் நெறைய இருக்கு.எல்லாருக்கும் பெங்களுர் புதுசு. pick up பண்ணுறதுக்கும், தங்கும் இடம் எல்லாம் offer பண்றதுக்கும் இங்க வேற யார் வீடும் இல்ல.சென்னை ல இருந்தும், சொந்த ஊரிலுருந்தும் வர்ற எல்லாரையுமே நம்ம தான் பாத்துக்கணும்.அவங்களோட pick-up, drop, stay, food, entertainment என்று எல்லாமே நான், அவர், மாமனார், மாமியார் நாலு பேரும் மட்டுமே சமாளிக்க வேண்டிய challenge நெருங்க நெருங்க எங்க எல்லாருக்கும் ஒரே உதறல்.

எல்லாருக்கும் இந்த உதறல் மட்டும் தான்னா, எனக்கு எக்ஸ்ட்ரா உதறல் வேற.அதாவது திருமணம் ஆன உடனே, abroad போய்ட்டதுனால, நாங்க பெரும்பாலான குடும்ப விழாக்களை மிஸ் பண்ணிட்டோம் கடந்த மூணு வருஷமா.நடுவுல அர்ஜுனோட பேர் வைக்கும் function அன்னைக்கு, எனக்கு கைபுள்ளைக்காரி ன்னு சலுகை இருந்ததுனால, எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் இந்த முறை அப்டி இல்ல.

"நானும் உங்க குடும்பத்துக்குள்ள வந்துட்டேன்" அப்டின்னு நமக்கு ஒரு எடம் பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு...
"என்ன மக்கா?"
"ஊர்ல பாட்டி தாத்தா எல்லாம் சும்மா இருக்காங்களா???" (நல்லா இருக்காங்களா வோட nagerkoil version)
"அந்த சர்வத்தை எடு" (சர்வம் - பாத்திரம்)
"அந்த போணிய எடு" (போணி - இன்னொரு பாத்திரம்)
"இந்தாம்மா...இத எல்லாருக்கும் வெளம்பு" (விளம்புதல் - பரிமாறுதல்)
"ரொம்ப வெசக்குது" (வெசக்குது - வியர்க்குது)
""ரொம்ப சடஞ்சுட்டேன்" (பலவீனமா ஆயிட்டேன்)

இந்த ரீதியிலான உரையாடல்களை எல்லாம் சகஜமா புரிஞ்சுக்கிட்டு கரெக்ட் ஆ react பண்ணனும். "அப்டின்னா??" அப்டின்னு அபத்தமா கேள்வி கேக்க கூடாது.
அப்போப்போ முடிஞ்சா இந்த வார்த்தைகளை எல்லாம் சரளமான தொனியில் பேசி,
"இது நம்ம பொண்ணு" என்ற பீலிங் வரவழைக்கணும்."கதிர் சரியான பொண்ண தான் கூட்டிட்டு வந்துருக்கான் நம்ம குடும்பத்துக்கு" ன்னு அவரோட மானத்தை காப்பாத்தணும்.

ஒரு வாரத்துக்கு முன்னாடிலேர்ந்தே வீடு களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு.
மாமா, அத்தை போய், தேவையான provisions எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க.
அவர் எல்லாருக்கும் தூங்குவதற்கு பாய், தலையணை, மெத்தை, போர்வை எல்லாம் வாங்கிட்டு வந்தார். முதல் சுற்று உறவினர்கள் மட்டும் தான் என்றாலும், அதுவே ஒரு நாற்பது பேர் வந்துது எங்களையும் சேர்த்து. வீட்டுல இருக்கது ஒரு ஹால், மூணு ரூம்,அதனால எக்ஸ்ட்ரா மூணு guest ரூம் போட்டு வெச்சுகிட்டோம். ஞாயிறு இரவு மட்டும் தான் function என்றாலும், எங்களுக்கு சனி, ஞாயிறு,திங்கள் என்று மூணு நாளுமே விழா மாறி தான் தோணிச்சு. ஏன்னா எல்லாரும் சிலர் சனிக்கிழமை காலையிலும், மீதி பேர் ஞாயிறு காலையும் வருவதாகவும், பெரும்பாலானோர் திங்கள் கிழமை இரவு கெளம்புவாதகவும் சொன்னார்கள்.உக்காந்து ஒன்பது வேளைக்குமாக மெனு decide பண்ணி வெச்சோம்.வர்றவங்க எல்லாருக்கும் gift வாங்கி cover போட்டு பேரு எழுதி வெச்சோம்.


வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனா, வீடே இட்லி மாவுல மூழ்கி இருக்கு.என் மாமியார் அவ்ளோ மாவு அரச்சு தள்ளிட்டாங்க. பெரும்பாலான உணவு வெளியில் இருந்து வரவழைப்பதாக தான் பிளான், இருந்தாலும் அவசரத்துக்கு ஆகும்(??) என்று அவ்ளோ மாவு.

சனிக்கிழமை என் ரெண்டு நாத்தனார் குடும்பபும் வந்து சேர்ந்தார்கள். மீதி எல்லாரும் ஞாயிறு காலை.

என் கணவரும், மாமனாரும் சாப்பாடு வாங்கி வரவும், மாமியாரும், அவருடைய ரெண்டு அக்கா, நாத்தானர்கள், அதை எல்லாம் arrange பண்ணி எடுத்து எடுத்து குடுக்கவும் ,நானும் என் நாத்தனார்களும் பரிமாறவும் இல்ல இல்ல...விளம்பவும்....அட அட அட....:-)

என் நாத்தனார் கணவர்கள் ரெண்டு பேரும், பார்ட்டி ஹால் decoration.

ஞாயிற்றுக்கிழமை மாலை விழா இனிதே நடைபெற்றது.

-function dinner மெனு வில், தயிர் சாதமும் ஊத்தப்பமும் மட்டும் எங்களை செய்ய சொன்னார் அவர். மதியம் லஞ்ச் முடிஞ்சு எல்லாரும் சற்று ரெஸ்ட் எடுக்க போய் விட, நானும் என் நாத்தனார்களும் ஊத்தப்பமும், தயிர் சாதமும் செஞ்சோம். dinner ல ரொம்ப மிச்ச பட்டது இந்த ரெண்டு item தான்.

- என் மாமியாரின் அண்ணன் மகள் பிறவியிலேயே பேச முடியாதவர். அவருடைய ரெண்டரை வயது பொண்ணு பவித்ரா, மற்றவர்கள் எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும், அவளோட அம்மாவிடம் மட்டும் அவங்க மாறியே செய்கையில், தன்னுடைய தேவைகளை தெரிவித்தது எங்க எல்லாரையும் நெகிழ வைத்தது.

-"இந்த பைப் தொறந்தா வெந்நீர் வரும், இதுல தண்ணீர்,இப்டி திருப்பணும்,சூடு போதுமா பாருங்க" இந்த dialogue ஐ ஞாயித்து கிழமை ஒரு பத்து தடவை சொல்லிருப்பேன்.

-"ஏன் மூணு ரூம்லயும் western toilet இருக்கு?? " அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்.
"western toilet தான் actually ரொம்ப hygenic...blah blah" அவரும் சளைக்காம எல்லாருக்கும் பதில் சொன்னார்.

- மூணு நாளும் வீடு முழுக்க எச்சில் இலை, disposable tumblers, அழுக்கு துணி, செருப்புகள், பேப்பர்.ஆனால் எங்க வீடு எனக்கு அப்போ ரொம்ப அழகா இருந்த மாறி இருந்துச்சு.

-கடவுள் நம்பிக்கை இல்லாத என் மாமனார் க்கு மாமியாரின் பெரிய அண்ணன் திருநீறு இட்டு விடவும், இது தான் சாக்கு என்று வரிசையாக எல்லாரும் திருநீறு பூச ஆரம்பிக்க, நாங்களும் 'இதற்காக தானே காத்து இருந்தோம்' range ல அவர் காலில் விழ, என் மாமியார் எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டு அவங்க ஆசையை தீர்த்து கொள்ள, மாமனார் பொறுமை காத்தார்.

-எப்போதும் எல்லாருக்கும் பரிமாறி முடித்து விட்டு நானும் என் நாத்தனார்களும் கடைசியில் ஒண்ணா உக்காந்து சாப்பிடறத பாத்து ஒற்றுமைக்கு பெயர் பெற்ற என் மாமியாரின் நாத்தனார், எங்களை "ஒற்றுமையா இருந்து சாப்பிடறீங்க" என்று பாராட்ட எங்க மூணு பேருக்கும் பெருமை பிடிபடலை.

-Sunday அர்ஜுனை பார்த்து கொள்ளும் பொறுப்பு என் அம்மாவிடமும், Dinner முடிஞ்சு ஐஸ் கிரீம் distribution என் தம்பியிடமும் கொடுக்க பட்டது.

-ஒரு van ஏற்பாடு செய்து எல்லாரையும் திங்கள் கிழமை பெங்களூர் Sight-seeing அனுப்பியாகி விட்டது. Lalbhag இல் flower-ஷோ, Iskon Temple என்று சுற்றிவிட்டு வந்தார்கள்.

- எல்லாரும் விழா முடிஞ்சு ஊருக்கு கெளம்ப கெளம்ப, அப்பாடா வேலை முடிஞ்சுது என்று ஆயாசம் வருவதற்கு பதிலா, "அய்யோ முடிஞ்சுடுச்சே, எல்லாரும் கெளம்பிட்டாங்களே" என்று கவலையாக இருந்தது உண்மை.

-5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்:-)

-நேற்று ஊருக்கு கெளம்பிய என் மாமியாரின் பெரிய அண்ணன், என் மாமியாரை கொஞ்சம் வெளிய போயிட்டு எதிர்க்க வாம்மா என்று சகுனம் பாக்க, என் மாமியாரும் உடனே வெளிய போய் எதிர்க்க வந்தார், என் மாமனார் அத பாக்கலை:-)

-மற்றவர்கள் எல்லாரும் கெளம்பி விட்டார்கள். என் மாமியாரின் இரு அக்காக்கள் மட்டும் சில நாட்கள் எங்களுடன் தங்குகிறார்கள். வீட்டில் மூணு மாமியார்கள் இருப்பதால் ஆபீஸ் ல ஸ்பெஷல் permission குடுத்து இருக்கிறார்கள் எனக்கு சீக்ரம் கெளம்ப சொல்லி:-) நல்ல பொண்ணா சீன் போட நேரமே பத்தலை.

-அவரை பாராட்டுவதில் எப்போவுமே கஞ்ச தனம் காமிக்கும் என்னை , இந்த முறை அவருடைய planning and execution பிரமாதம் என்று சொல்ல வெச்சுட்டார். ஒரே நேரத்துல KR Puram, Cantonment, Majestic என்று மூன்று இடங்களில் வந்து இறங்கியவர்களை pick up செய்தது ஆகட்டும், குழந்தைகளோட வந்தவர்களுக்கும் , பயணத்தில் ரொம்ப சிரமப்பட்டு வந்தவர்களுக்கும், guest ரூம் allot பண்ணிய சாமர்த்தியம் ஆகட்டும்.சரியான நேரத்தில் சாப்பாடு எல்லாம் வரவழைப்பது, பரிமாறுவதில் எனக்கும் நாத்தனார்களுக்கும் உதவரதுன்னு பின்னிட்டாரு.

-மொத்தமாக வந்து இருந்த குழந்தைகள் ஏழு. அர்ஜுன் பயங்கர ஆட்டம்.

-குடும்பமாக எல்லாரும் சேர்வது கல்யாண மண்டபத்தில் மட்டுமே என்ற ஆதங்கம் எல்லாருக்கும் இருந்து இருக்கிறது.இப்டி மொத்த குடும்பமும் ரெண்டு மூணு நாள் சேந்து இருக்கும் வாய்ப்பு கெடச்சது பரம திருப்தி.ஏதோ ஒரு வாரமா எனக்கு விக்ரமன் படம் பாத்தா மாறி ஒரு உணர்வு.வந்தவங்க எல்லாருக்கும் எந்த குறையும் இல்லன்னு நெனைக்குறேன். God Bless.


எழுதும் போது மறந்து விட்டு போய், பின்னால் சேர்த்தது 02-February-2009
---------------------------------------------------------------------

-நான் ஒரு plate ல coffee tumbler எல்லாம்வெச்சு எடுத்துட்டு போய், எல்லாருக்கும் distribute பண்ணிட்டு இருந்தேன், உடனே என் நாத்தனார் ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய், நான் வழக்கமான வாய்கொழுப்புல, "பொண்ணை புடிக்கலை ன்னு சொல்லிடுங்க, அப்டியாவது நான் தப்பிச்சுக்குறேன்" ன்னு சொன்னது நல்ல வேளை, பெரியவங்க நெறைய பேரு காதுல விழலை...:-)

-எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று formal ஆக அழைக்கும் அவருடைய அத்தை, பெரியம்மா எல்லாம் இந்த முறை, "எடீ," என்று அவர்கள் பாஷையிலேயே அழைக்க ஆரம்பித்து விட, "ஆஹா நம்மளையும் ஆட்டை ல சேத்தாச்சு" என்று எனக்கு ஒரே குஷி.

Monday 12 January 2009

கருவாச்சியும் நானும்!!!

கல்லூரியில் படிக்கற வரைக்கும் ஏதாவது புத்தகத்தைப் பாத்தா போதும், அத கைல எடுத்துட்டா சாப்பாடு வேணாம், தண்ணி வேணாம், தூக்கம் வேணாம், டிவி வேணவே வேணாம்.....அந்த புத்தகத்தை கடைசி வரைக்கும் படிச்சு முடிச்சுட்டா தான் 'ஜென்ம சாபல்யம்' அடைஞ்ச மாறி இருக்கும்....அதுக்கு அப்றோம் அவ்ளோ வெறியோட படிக்குறது கொறஞ்சுடுச்சு....நண்பர்கள் ரொம்ப ரொம்ப recommend பண்ற புத்தகங்கள் மட்டும் என்கிற அளவில் என்னுடைய புத்தக உலகம் சுருங்கி தான் போனது....'நேரம் இல்லை' ன்னு சொன்னால் அது ஒரு சறுக்கு மட்டுமே.....நண்பர்கள் "மெயில் பண்ண... போன் பண்ண....மீட் பண்ண.... நேரம் இல்லன்னு" சொல்றப்போ எல்லாம் மனசுக்குள்ள அவங்கள வைது இருக்கேன்...."மனசு இருந்தா நேரம் எல்லாம் நம்மளா உருவாக்கிக்கலாம்" ன்னு நெனச்சு இருக்கேன்.....எனக்கும் அது பொருந்தும் தானே?அதுனால படிக்க நேரம் இல்லன்னு சொல்ல மாட்டேன், 'my prioritieis have changed ' ன்னு உண்மைய ஒத்துக்குறேன்.




இப்படியான என்னுடைய குட்டி புத்தக உலகத்துல,
இப்போ கவிஞரின் கருவாச்சி....:-)..:-(
இந்த இடத்துல நான் படிக்குறதுக்காக சிரிக்குற smiley போடனுமா இல்லாட்டி கருவாச்சி படுற பாட்டை நெனச்சு அழுவுற smiley போடணுமான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு....அதுனால ரெண்டையும் போட்டுட்டேன்.

அர்ஜுன் தூங்கின அப்றோம் நைசா எந்திருச்சு ஹால் க்கு போனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஓஓ ன்னு ஒரு அழுகை சத்தம் கேக்கும்....பயபுள்ள பக்கத்துல அம்மா இல்லன்னு எப்டித்தான் கண்டு புடிக்குறானோ.........
அவன் பக்கத்துலையே நம்ம presence ஐ feel பண்ண வெச்சுகிட்டே சின்ன லைட் வெளிச்சத்துல... அந்த லைட் வெளிச்சம் அவன் மூஞ்சிலயோ,அவங்கப்பா மூஞ்சிலயோ படாம அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டும், கம்பெனி வரப்போ போறப்போ cab லையும்.... இப்டியாக கருவாச்சியும் நானும்....

கவிஞரின் கவிதை தொகுப்புகள் எனக்கு நெறைய உதவி செஞ்சு இருக்கு....
'"இமயத்திற்கும் சரிவு உண்டு இருபுறமும்...இளைய தோழா எழுந்து வா..."
"நீ எறும்பாய் இருந்தால் என்ன? ஊர்ந்து கொண்டே இரு...இரும்பும் தேயும்...." ன்னு அவர் வரிகளை என் பள்ளி நாட்களில் பல போட்டிகளில் பயன் படுத்தி இருக்கிறேன்...
தலைவர் பாரதியும், கவிப்பேரரசும் என்னோட ஸ்கூல் competition prizes க்கு எல்லாம் ராயல்டி claim பண்ற அளவுக்கு ஆட்டம் போட்டு இருக்கேன்...:-)

தமிழ் சினிமா பாடல்களை பொறுத்த வரை ரெண்டு ரகமானவர்கள் இருக்காங்கன்னு நான் நெனைக்குறேன்....
ஒரு ரகம் வைரமுத்து ரசிகர்கள், மறுரகம் தமிழ் சினிமா பாட்டு கேட்காதவர்கள் / புரியாதவர்கள் .
உண்மையில் அவருடைய வார்த்தை விளையாடல்களுக்கு மயங்காதவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை....
எந்த ஒரு உணர்வுக்கும், உறவுக்கும் உயிரோட்டமுள்ள எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தவர். தமிழ் படித்த கவிஞரின் trendy technical language ம், ஒட்டு மொத்த காமத்துப் பாலையும் ஓரிரு வரிகளுக்குள் திணிக்க முடிந்து விடும் திறமையும் நான் மேற்கோள் காட்டி ஞாபகப் படுத்த வேண்டிய அவசியம் அவரை படிக்கும், கேட்கும் யாருக்கும் இருக்க போவதில்லை....
ஆனால் கவிஞருக்கு "சமுத்திரம் கடக்க ஆசை பட்டவன் நான்...ஒரு சிப்பிக்குள் நீச்சல் அடித்து கொண்டு இருக்கிறேன்" ன்னு தன்னுடைய தேடல் சினிமாவில் முடங்கி இருப்பதாக ஒரு குறை உண்டு....அந்த தேடலுக்கு வடிகாலாக அவருடைய படைப்புகளில் ஒரு முழுமையை கொண்டு வர முயற்சிக்கும் தீவிரம் கருவாச்சியிலும்....

தண்ணீர் தேசத்திலும், கள்ளிக்காட்டிலும் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு, அறிந்து, அனுபவித்து எழுத்தில் கொண்டு வந்தாரோ அதே மாதிரி இங்கயும் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் ஏட்டறிவை கொண்டு எழுதாமல், கண்டு கேட்டு அனுபவித்து எழுதி இருக்காரு......
கள்ளிக்காட்டில் பேயத்தேவர் ஒரு பசுவுக்கு பிரசவம் பார்க்கறப்போ, இங்க படிக்கறவங்களோட தொண்டைக்கும் வயித்துக்கும் ஏதோ ஒண்ண அடைக்க வெச்சவரு, இங்க ஒரு படி மேல போயி, கருவாச்சிய அத்துவான காட்டுல தன்னந்தனியா பிரசவிக்க விட்டு, கருவாச்சி பெத்து பொழச்சதும் படிக்குற நமக்கு வயித்துச் சுமை இறங்கிட்ட மாறி பெருமூச்சு வரவழைக்குறாறு.
கருவாச்சி கருவாட்டு கொழம்பு வைக்கும் போது நமக்கு நாக்கு ஊருது....
கருவாச்சிக்கு அவங்கம்மா உடம்பு பிடிச்சு விட, நமக்கு சொகமா இருக்கு....இப்டி காவியம் முழுக்க அவரோட ராஜ்யம்....

ஆனா அத்தியாயத்துக்கு அத்தியாயம் கருவாச்சி படும் கஷ்டங்கள் தாங்க முடியலை....பக்கம் பக்கமா அவள பாடாப்படுத்தி வெக்குறப்போ "சொல்லுங்க கவிஞரே! what next is waiting for her????" ன்னு ஒரு அலுப்பு வருது...அலுப்பு ன்னு சொல்லுறதுக்காக வைரமுத்து maniacs என்னை மன்னிக்கட்டும்....I myself is one by the way.

தமிழ் ரோஜாவையும், கலைவண்ணனையும் உயிரோட கரையேத்தி, தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்காமல், புண்ணியம் சேர்த்துக்கொண்ட கை தான், பேயத்தேவரைக் கொன்று போட்டு மொக்கராச அனாதையா ஆக்கிச்சு....கருவாச்சில இன்னும் ஒரு முப்பது பக்கம் பாக்கி இருக்கு.......என்ன பண்ண காத்துருக்காரோ கவிஞர்????