Wednesday 9 March 2011

ஒரு மூக்கு கதை

மூக்கில் என்னவெல்லாம் போடலாம்?பெண்கள் மூக்குத்தி போடலாம். கணவனுக்கு பிடித்தால். மூக்கே குத்தாமல் நயன்தாரா மாதிரி வளையம் போட்டுக்கலாம். சளி பிடித்தால் விக்ஸ் போடலாம். கொஞ்சம் அதிரடியான ஆளாக இருந்தால் டைகர் பாம் ஜண்டு பாம் கூட போடலாம்.மூக்குப்பொடி போடலாம்.மூக்கின் மேல் கண்ணாடி போடலாம். அடுத்தவர் விஷயத்தில் நாம மூக்கையே கூட போடலாம். ஆனால் மூக்குக்குள் ஆரஞ்சு பழ கொட்டையை போடலாமோ? எங்க அர்ஜுன் போட்டுக்கிட்டான்.



முந்தா நாள் இரவு, குடும்பமாக ஹாலில் உட்கார்ந்து இருந்தோம்.டிவியில் அயர்லாந்துடன் இந்தியா மேட்ச்.'யூசுப் பத்தனை அனுப்பாமல் டோனி ஏன் பேட்டிங் பண்ண வந்தான்?' என்று ட்வீட்டிக்கொண்டு சைடில் ஆபீஸ் வேலை. சோபாவில் உட்கார்ந்து இருந்த அர்ஜூன் திடீர்ன்னு "அம்மா மூக்கு..."ன்னான்.

வயிற்றில் அர்ஜுன் இருந்த பத்து மாதமும் கடவுளுக்கு வித விதமான கோரிக்கை வைப்பேன். அதில் ஒன்று என் குழந்தைக்கு எனக்கு மாதிரி சப்பை மூக்கு இருக்க கூடாதென்பது. ஆனால் கேட்டதற்கு மாறாக அதே மாதிரி மூக்கு. நூலை போல் சேலை.

"அம்மா நீ எனக்கு சின்ன வயசில் மூக்கை நல்லா நீவி விட்டு இருந்தா இப்போ இப்டி சப்பையா இருந்து இருக்காதில்ல?" அடிக்கடி எங்கம்மாவிடம் இதை கேட்பேன்.

"ஏதோ நீவி விட்டதால தான் இந்த அளவாவது இருக்கு.பொறந்தப்போ மூக்கு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டே ரெண்டு ஓட்டை மட்டும் தான் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ" தவறாமல் இப்படி பதில் சொல்வாங்க எங்கம்மா.

எனக்கு சுபா என்றொரு தோழி இருந்தாள். எனக்கு நேர்மாறாக அவளுக்கு ரொம்ப பெரிய மூக்கு. நாங்கள் இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம். "கடவுள் நம்ம ரெண்டு பேர் மூக்குலயும் ஒரு ஒரு இன்ச்ல வெளாடிட்டார்"ன்னு...பிரேமலதான்னு ஒரு ஸ்கூல் மேட். அவளுக்கு திடீர்ன்னு விபரீத கற்பனைகள் வரும். திடீர்ன்னு ஒரு நாள் "மனுஷனுக்கு மூக்கே இல்லன்னா முகத்துக்கு சோப்பு, பவுடர்லாம் போடும் போது நடுவுல இடிக்காது" ன்னா. "த்ரீ இடியட்ஸ்" படத்துல அமீர்கானுக்கு கடைசி சீன் வரை கிஸ் பண்றப்போ மூக்கு இடிக்குமான்னு உலக மகா சந்தேகம் இருக்கும்.

சரி கதைக்கு வருவோம்.

"அம்மா மூக்கு..."

"மூக்குக்கு என்னடா?"

"கண்ணாடி எடுத்துட்டு வாங்க, பாக்கணும்"

"ஆமா இப்போ எதுக்கு கண்ணாடி?"

"ஆரஞ்சு விதையை மூக்குள்ள போட்டுக்கிட்டேன்"

"என்னது?"

.

.

.

பதறி போய் மூக்குக்குள் டார்ச் அடித்து பார்த்தால் ஒரு ஆரஞ்சு விதை இருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சடைத்தது. ஞாயிற்றுக்கிழமை அதுவும் அந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் டாக்டர் கிடைப்பதென்பது அயர்லாந்துடன் டாஸ் ஜெயித்தும் பவுலிங் என்றாரே டோனி அது மாதிரி ஒரு முரண். 24*7ஆஸ்பத்திரி உதவியை தான் நாட வேண்டும். அவர் வேறு ஊரில் இல்லை. நானே ஏதாவது முயற்சி செய்து ஆரஞ்சு விதையை எடுக்க பார்க்கலாமா என்று யோசித்தேன். ஒரு துணியை சுருட்டி மூக்கின் இன்னொரு துளையில் விட்டால் தும்மல் போட்டு அந்த விதை வெளியில் வந்து விடலாம் என்ற நப்பாசையில் முயற்சித்து கொண்டிருந்தேன்.பதட்டத்தில் கை நடுக்கம். இப்படி பண்ணிவிட்டானே என்று கோவம்.

கீழ்வீட்டில் ஒரு பெண். அனஸ்தீசியா நிபுணர்.சமயோசிதமாக அவரிடம் ஓடி இருக்கிறார் என் மாமியார். 'இந்த மாதிரி நிலைமை என்ன செய்யலாம்' என்று கேட்டதும் அவர் இவனை அவர் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாராம். அங்கே எடுத்து கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அவர்கள் வீட்டில் forceps வைத்து இருந்தார்கள். ஒரு பவர்புல் டார்ச்சை வைத்து இவன் மூக்கிற்குள் லைட் அடித்து பார்த்து, 'அப்படியே உள்ளே தள்ளிவிட்டால் தொண்டைக்குள் போய் விடும், துப்பி விடலாம் அல்லது முழுங்கி விடலாம்' என்றார். எனக்கு என்னவோ அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. 'முடிந்தால் வெளியில் எடுத்து விடுங்களேன்' என்றேன்.

அவர் போர்செப்சை இவன் மூக்கிற்கும் கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக இவன் கண்களை மூடிக்கொண்டு போர்செப்சை மூக்கிற்குள் கொண்டு போயும், இவன் திமிறிய திமிறில் மூக்கிற்குள் பட்டு ரத்தம் கொட்டிவிட்டது. அடுத்தவர் வீட்டில் வைத்து பொங்கிக்கொண்டு வரும் அழுகையை அடக்குவது மிக சிரமம்.எப்படியோ சமாளித்தேன்.

ஆரஞ்சு கொட்டையை எடுத்து விட்டு, இவன் மூக்கை துடைத்து ஆன்டிசெப்டிக் ஜெல் எல்லாம் போட்டு விட்டார்கள். இவனும் சற்று அமைதி ஆனான். அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கவனித்தேன். ஒரு போர்டு வைத்து தினம் ஒரு குறள் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அன்றைய குறள்
காலத்தினார் செய்த நன்றி...


மறுநாள் ஆபிசில் ஒரு பெண்ணிடம் 'அர்ஜுன் இப்டி பண்ணிட்டான்' என்று
புலம்பிக்கொண்டு இருந்தேன்.

"All kids do this yaa. I also put a greenpea in my nose when I was small. You ask you mom; you would have done something similar" என்றாள். உடனே எங்கம்மாவிற்கு போன் செய்தேன்.

'அம்மா நேத்து ராத்திரி அர்ஜூன்....'

'...அச்சச்சோ அப்றோம்?'

..
..
..
"பாரும்மா...அவங்கப்பா வேற ஊர்ல இல்லாத நேரத்துல என்னை எப்டி படுத்தி வெக்கறான்னு"

"ச்ச குழந்தையை திட்டாதே. நான் கூட சின்ன புள்ளையா இருந்தப்போ இப்படித்தான் மருதாணி விதையை மூக்குல போட்டுக்கிட்டேனாம்; உங்க அம்மாச்சி சொல்வாங்க"

*******