Tuesday 31 August 2010

Meal with Monkeys

அலுவலகத்தின் இணைய மாதாந்திரி, "Potpourri " யின் ஆகஸ்ட் எடிஷனில் வெளியானது.

Have you ever shared a meal with a monkey? Well, I have and not just once!


About seven years ago, five of us, happily planned a day out to Nandi hills.

This story is not about where Nandi Hills is and how we went there etc. You always have internet to help with those details. There is one piece of information that you can’t fine on the internet: Carry a long stick when you go there. Let me tell you why…

We, 5 girls, were staying together back then and we cooked/packed chapattis and chole for a grand lunch up hill. As we got down at the top of the hill, we were all really hungry. The first thing we did was to open our lunch pack. We were thick friends, so thick that we planned to eat together from the same plate. So there it was, one plate of food and five hands attacking it. Suddenly we realized there was a sixth hand, much faster than the rest, which looked quite different than the manicured, nail polished hands, so to say! Only God Nandeeshwar knows when Mr. Monkey silently joined us. And he enjoyed our cuisine, as we all ran meters away from our food and him.

I said not just once! This time, about 2 months back, Nandi Hills with my family… Curd rice and potato fry. On our way, I was describing my earlier experience, and hence we decided to finish lunch down hill and then drive up. To our misconception, about twenty monkeys surrounded us as we just opened the box. This time no sharing meal!! They just took away the all the food including the box.

Later I gathered that the monkeys are scared of sticks and it seems the longer the stick, the farther they stay. So, unless you want to share your meal with the monkeys, carry a long stick along.

Earlier Nandi Hills was called Ananda Giri meaning The Hill of Happiness and it indeed is.

Thursday 19 August 2010

வெட்டுக்கிளி(என்னை தேடுதே)

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம், ஒரு வெறுப்பு, ஒரு ஒவ்வாமை இருக்கும். நடிகைகள் பேட்டிகளின் போதெல்லாம் சொல்வார்களே.... எனக்கு பல்லின்னா பயம். கரப்பான் பூச்சின்னா பயம்...

 

என்னுடைய தோழி ஒருத்தி. தந்தூரி சிக்கன் என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவாள். ஆனால் அதே கோழி உயிரோடு இருக்கும் போது பார்த்தால், இவளை யாரோ தந்தூரி அடுப்புக்குள் தூக்கி போட்டு விட்டது போல அலறுவாள். அதுவும் கோழிகள் அதனுடைய இறக்கையை விரித்து படபடவென்று அடிக்குமே, அந்த போஸில் பார்த்தால் செத்து பிழைப்பாள். அவ்வளவு பயம். இன்னொருத்தி, அவளுக்கு புழு என்றால் பயம். பயம் என்பதை விட ஒரு விதமான அருவருப்பு. கம்பளி புழு டிஸ்கவரி சேனலில் காண்பித்தால் கூட உவ்வே என்பாள். அவள் சாப்பிடும் போது, ஒரு பேச்சுக்கு 'இன்றைக்கு வெண்டைக்காய் வெட்டும் போது புழு இருந்தது' என்று சொல்லி விட்டால், அன்று நமக்கு சாப்பாட்டில் மொத்த வெண்டைக்காய் வதக்கலும் வாய்க்கும். எனது சித்தி ஒருவர், தவளையை எங்கேயாவது பார்த்து விட்டால், அழுதே விடுவார்.

எனக்கு என்னவோ சின்ன வயசில இருந்தே வெட்டுக்கிளி என்றால் பயம். பயம் என்றால் சாதாரண பயம் இல்லை...எவ்வளவு பயம் என்று நீங்களே மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்டுக்கிளிகளில் இரண்டு ரகம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கிளிப்பச்சை கலரில் இருக்கும். இன்னொன்று மரக் கலர் என்று சொல்வாங்களே...அந்த மாதிரி பிரவுனும் சாம்பலும் கலந்த ஒரு வண்ணம். சிறுவயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி நிறைய மரம் செடி இருந்ததனாலோ என்னவோ வெட்டுக்கிளிகள் நிறைய இருந்தன. அதுவும் சைஸ் வாரியாக..சிலது ஒரு சாண் நீளம் கூட இருக்கும். சமயத்தில் மாலை நேரங்களில் விளக்கு போட்டதும், அவைகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருந்தது. வீட்டில் வேறு யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் அதை பார்த்தால் அப்படியே நடுங்கி விடும். அது ஒரு இடத்தில் சும்மா இருக்காது.அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும். ஐந்து வினாடிகள் கூட அங்கே இருக்காது. மறுபடி பறக்கும். மறுபடி செட்டில் ஆகும். அப்படி உட்காரும் போது 'டப்' என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்கிறது பயத்தில். சில நேரம் அது நம் மீது கூட வந்து உட்காரும். என் தம்பி எல்லாம் அதை ஏதோ தூசு மாதிரி தட்டி விட்டு விட்டு வேலையை தொடருவான். நான் அது  உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அடுத்த ரூமிற்குள் போய் கதவை சாத்தி கொண்டு விடுவேன். என் வீட்டினர் என் மீதும் வெட்டுக்கிளியின் மீதும் இரக்கப்பட்டு அதை பிடித்து வெளியே போட ஆரம்பித்தார்கள்.

அதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அது பறந்து கொண்டே இருக்கும் போது ஒரு துணியை வீசி அதை பிடித்து வெளியில் எறிவார்கள். சில நேரம் அது தரையில் உட்கார்ந்தது என்றால் அதன் மீது ஒரு பாத்திரத்தை போட்டு மூடி அப்படியே நகர்த்தி கொண்டே போய் கதவுக்கு வெளியே பாத்திரத்தை திறந்து விட்டு அதே நேரத்தில் கதவையும் மூடுவார்கள். "போன முறை நான் பிடிச்சு போட்டேன் இல்ல, இன்னைக்கு நீ பண்ணு" என்பது போன்ற உரையாடல்கள் எங்கள் வீட்டில் சகஜமானது. எனது பாட்டிக்கு என் மீது மிக பிரியம். வீட்டிற்குள் அது வந்ததும் "அவ பாத்தா பயப்படுவா"ன்னு விளக்குமாறை எடுத்து கொண்டு கிளம்பிவிடும்.

யார் கையிலாவது அது மாட்டும் வரை படபடப்பாக அடுத்த ரூமுக்குள் இருப்பேன். சில நேரம் அம்மாவும் அப்பாவும் பிசியாக இருந்தால், என் தம்பியிடம் கெஞ்சுவேன். "டேய் ப்ளீஸ் டா, அதை பிடிச்சு போடுடா" என்று...அவன் அசால்ட்டாக, "நேத்து பெரிய கேக் பீஸ் நீ எடுத்துகிட்டு எனக்கு சின்னது தந்த இல்ல...போ போ பிடிச்சு போட முடியாது" ன்னு நேரங்காலம் தெரியாமல் வெறுப்பேற்றுவான்.

 'பிடிச்சு போட்டாச்சு வா..' என்ற வார்த்தை கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்புவேன். இருந்தாலும் நிஜமா நிஜமா...என்று நான்கு முறை கேட்டு, யாராவது ஒருவர் சத்தியம் செய்ததும் தான் வெளியில் வருவேன்.சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட ஓடி இருக்கிறேன்.

டிசம்பர் பூ என்று ஒன்று இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நிறைய பூக்கும். ரோஸ், ஊதா, வெள்ளை, ராமர் கலர் என்று ஒன்று, ஊதாவில் வெள்ளை கோடு போட்டு இருக்கும். இப்படி நிறைய கலர்களில். எங்கள் தோட்டத்தில் எல்லா கலரிலும் செடிகள் இருந்தது. உடைக்கு மேட்சாக அந்த கலர் பூவை நீளமாக தொடுத்து அம்மா வைத்து விடுவார்கள். பூ பூப்பதற்கு முன் வரும் மொட்டுக்கள் கிட்டத்தட்ட பச்சை வெ.கி மாதிரியே இருக்கும். ஒரு முறை பூ பறித்து கொண்டு இருந்தேன். அந்த செடியில் ஒன்று உட்கார்ந்து இருந்து இருக்கிறது. அது தெரியாமல் நான் பூ பறிக்க, தவறி போய் என் கை அதன் மீது பட்டு விட்டது. அது பறந்து என் மீது பாய, நான் அலறிய சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அம்மா அப்பா எல்லாம் தோட்டத்தில் பாம்பு ஏதும் வந்து விட்டதோ என்ற ரீதியில் பயந்து போய் ஓடி வந்தார்கள்.

அது கூட பரவாயில்லை. எட்டாவது படித்து கொண்டு இருந்த போது, எனக்கும், ஒன்பதாவது வகுப்பில் இருந்த பார்கவிக்கும் சுத்தமாக ஆகாது. எப்போதும் முறைத்து கொள்வோம். பார்கவிக்கு எனது இந்த பயம் எப்படியோ தெரிந்து போனது. ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது மைதானத்தில் என் முன்னால் வந்து நின்றது பார்கவி. 'என்னையா பகைச்சுக்கற?' என்ற ரீதியில் ஒரு பார்வை. முதலில் அசராத நான், அப்பறம் தான் கவனித்தேன். அதன் கையில் ஒரு பச்சை கலர் வெ.கி."போடாதே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நான் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே என் மீது போட்டு விட்டது. நான் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டேன். முழித்து பார்த்த போது, சில பெண்கள் தண்ணீர் பாட்டிலோடு என்னை சுற்றி நிற்க, பார்கவி "ப்ளீஸ் ப்ளீஸ் டீச்சர் கிட்ட சொல்லிடாதே" என்று என்னை கெஞ்சி கொண்டு இருந்தது..

-----௦-------***--------------
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட இந்த பயம் மட்டும் அப்படியே இருக்கிறது. 'டேய் டேய் தம்பி அத பிடிச்சு போடுடா' மட்டும் 'ஏங்க ப்ளீஸ்ங்க.. அத பிடிச்சு போட்டுடுங்க' என்பதாக மாறி இருக்கிறது.

இப்போது நாங்கள் இருக்கும் வீடு மூன்றாவது மாடி. அபார்ட்மெண்டில் நிறைய செடிகள் இருக்கின்றன. அதை பார்த்ததுமே ஓரளவுக்கு உஷாராகி கிரவுண்ட் ப்ளோரில் வீடு வேண்டாம் என்று ஓனரிடம் சொல்லி, கடைசி மாடியில் செட்டில் ஆனோம். ஆனாலும் சில சமயம் மாடி வரைக்கும் பறந்து வந்து விடுகின்றன. நானும் கெஞ்சி கொண்டே இருக்கிறேன்.

------****---------------

நேற்று ஒரு மீட்டிங் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகி விட்டது. அண்டர்கிரவுண்டில் வண்டியை பார்க்கிங் பண்ணி விட்டு லிப்டுக்குள் நுழைந்து 3 என்ற எண்ணை அமுக்கினேன்.

டப்.

லிப்ட் கதவு மூடும் அந்த வினாடியில் பச்சையாக பெரிய சைசில் ஒன்று உள்ளே பறந்து வந்து லிப்டில் இருக்கும் லைட்டின் மீது உட்கார்ந்தது. விதிர்த்து போய் "ஓபன்" பட்டனை அமுக்க என் கை அனிச்சையாக நீண்டது.

சட்

.

.

.

பவர்கட்.
-----------*****------------

Tuesday 3 August 2010

Police Story

 'எங்க பரம்பரையிலேயே யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சு கூட படுத்தது இல்லை'
எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்னா, நான் நேற்று போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் விஷயமாக நேற்று காலை சுமார் பதினொரு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், கணவர், குழந்தை.போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் "எல்லோ பேஜஸ்" மூலமாக அறிந்து கொண்டு, அந்த ஏரியாவில் சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படி போக வேண்டும் என்று விசாரித்தோம். "இப்படியே நேரா போங்க, இடது பக்கம் வரும்" என்றார்;அவரை பார்க்க போலீஸ் மாதிரியே இருந்தார். எனக்குள் ஏதோ ஒரு பயங்கர ஆர்வமும் டென்சனும் கலந்த ஒரு பீலிங் இருந்தது.

தமிழ் சினிமா பார்த்து பார்த்து போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படி இருக்கும் என்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பிம்பம் இருந்து இருக்கும் போலும். பொன்னம்பலம் சாயலில் ஒரு இன்ஸ்பெக்டர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்; ஜெயிலுக்குள் கம்பிக்கு பின்னிருந்து இரண்டு மூன்று தலை எட்டி பார்க்கும். நாம் 'அட்ரஸ் வெரிபிகேசன்க்காக வந்து இருக்கேன்' என்று சொன்னதும், "போ போ; அப்படி உக்காரு; கூப்பிடறோம்" என்று விரட்டி அடிப்பார்கள். இப்படி ஏதேதோ யோசித்து கொண்டு போன எனக்கு அந்த கட்டடத்தை, பெரிய கட்டடம் என்று சொல்வதற்கில்லை; ஒரு சிறிய வீடு சைசில் இருந்த ஸ்டேசனை பார்த்ததும் முதல் அதிர்ச்சி, சினிமாவில் வர்ற மாதிரி செவப்பு கலரில் இல்லை. மஞ்சள் கலர் பெயின்ட், அதுவும் பெயிண்ட் அடித்து பல வருடம் ஆகி இருக்கும் போலும்.

வாசலில் ஒரு பக்கம் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட இருபது டூ வீலர்கள் அழுக்கடைந்து போய் நின்று கொண்டு இருந்தன. திருட்டு கேசில் பிடிதததோ, நோ பார்கிங்கில் அள்ளியதோ தெரியலை. பாதி உடைந்த நிலையில் ஒரு சேர் அந்த டூ வீலர்களின் மீது கிடந்தது.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம்.கதவருகில் நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கையில் பலாப்பழத்தின் ஒரு பகுதியை வைத்து கொண்டு அதில் இருக்கும் சுளைகளை லாவகமாக பிய்த்து பிய்த்து தின்று கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பீச்சில் பலூன் சுடுவோமே, அதே மாதிரி சைசில் ஒரு நீளமான துப்பாக்கி, சுவரில் சாய்த்து வைக்க பட்டு இருந்தது. அதன் குழல் பகுதியில் அவருடைய தொப்பியை மாட்டி இருந்தார்.

'ஹலோ சார்' என்றார் கதிர்.

'வாங்க வாங்க' திருமண வீட்டில் வரவேற்பதை போல வரவேற்றார் கன்னடத்தில்.

'பலாச்சுளை சாப்பிடுங்க' எனக்கு யாரோ முகத்தில் பலா சக்கை வைத்து அறைந்ததை போல் இருந்தது.

'பரவாகில்லா சார்; ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் செய்யணும்" கதிர் அவருக்கு தெரிந்த கன்னடத்தில்.

'மொதல்ல நீங்க பலாச்சுளை எடுத்துக்கோங்க, பையனுக்கும் கொடுங்க'

'இல்ல சார், அவனுக்கு சளி பிடித்து இருக்கிறது' கதிர் ஒரு சுளையை பிய்த்து எடுத்து கொண்டார்.

'மேடம் உங்களுக்கு...' என்னிடம் நீட்டினார்.

'இல்லை வேணாம் தேங்க்ஸ்'

'இப்படி உக்காருங்க; குமார் வருவார்; வந்ததும் பேசுங்க' என்று ஒரு பெஞ்சை காண்பித்து விட்டு சுளையில் பிசியானார்.

அந்த பெஞ்சில் ஏற்கனவே ஒரு இளைஞன் (ஆப்ரிக்கர் என்று நினைக்கிறேன்; பெங்களூரில் நிறைய ஆப்ரிக்கர்கள் தென்படுகிறார்கள்) உட்கார்ந்து இருந்தான். நாங்களும் உட்கார்ந்து கொண்டோம்.ஸ்டேசன் முழுக்க ஒரே பலாப்பழ வாசனை. உள்ளே இருந்த அத்தனை பெண்/ஆண் போலீஸ் கையிலும் பலாப்பழத்தின் ஒரு ஒரு பகுதி.லாவகமாக உரித்து உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து சுற்றி முற்றி பார்த்தேன். கம்பிக்கதவு போட்ட அறை கண்ணில் படவே இல்லை. ஒரு மேஜை போட்டு அதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எங்களை அடுத்து ஒரு அறை. அறை முழுக்க ஒரே பைல்கள். பேப்பர்கள். அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் என்று போர்ட் போட்டு அரை(half) கதவு போடப் பட்டு இருந்தது. உள் அறையில் இருந்து வந்து ஒருவர் என்னிடம் 'பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'சற்று பொறுங்கள்' என்று சொல்லி விட்டு போனார். அவர் யூனிபார்மில் இல்லை. மப்டி போலும்.


நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு பின்னால், ஒரு போர்டில், 'Civilians Rights' என்று FIR பற்றின ரூல்ஸ் எழுதி வைத்து இருந்தார்கள்.Non Fatal Accidents க்கு FIR காப்பி வேண்டும் என்றால் 50Rs கட்ட வேண்டுமாம்.Fatal என்றால் 81Rs.நாம் ஏதாவது கேஸ் கொடுத்தால், ஒவ்வொரு மாதமும் அதில் என்ன progress என்று status update கேட்கலாமாம்.

அப்போது இன்னொரு போலீஸ்காரர், மிகவும் வயதானவர், உள்ளே நுழையும் முன், ஸ்டேஷன் வாசலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து புன்னகைத்தார். பிறகு அங்கே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும், அவரிடம் வந்து அமர்ந்தனர். 'Anticipated bail' என்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.

திடீர் என்று வாசலில் நாங்கள் சந்தித்த பலாச்சுளை போலீஸ், பரபரப்பாக தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, துப்பாக்கியை கையில் எடுத்து தோள் மீது சாய்த்துக்கொண்டு விறைப்பாக நின்றார். போலீஸ் ஸ்டேசன் ஒரே பரபரப்பாகி எல்லாரும் எழுந்து கொண்டார்கள். நாங்களும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து கொண்டோம். ஆர்வமாகி வெளியே எட்டி பார்த்தேன். வந்தது பெரிய போலீஸ் போலும். பலாச்சுளை போலீஸ் சல்யுட் அடித்தார். பெரிய போலீஸ் நேராக உள்ளே வந்து எங்களுக்கு அடுத்து இருந்த அறையை கடந்து இன்ஸ்பெக்டர் என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.சற்று முன் வந்தமர்ந்த வயதான போலீஸ், எங்களை நோக்கி "உக்காருங்க" என்பதாக சைகை செய்தார்.

ஒரு பெண்மணி, சற்று கலவரமான முகத்துடன், கையில் ஒரு சிறுவனை பிடித்தபடி வந்தார். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். அவரும் அந்த பலாச்சுளை போலீசிடம் போய் ஏதோ விசாரிக்க, அவர் நாங்கள் அமர்ந்து இருந்த பெஞ்சை காட்டி, 'அங்கே போய் உட்காருங்க, என்றார். உடனே இந்த ஆப்ரிக்க இளைஞன் எழுந்து கொண்டு அந்த பெண்ணை அமர சொன்னான். அவரும் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்தது. அர்ஜுன் பொறுமை இழந்து, "அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்மா" என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான். நானும் வேடிக்கை பார்ப்பதும் வாட்ச் பார்ப்பதுமாக சற்று சலித்து இருந்தேன்.

'நீங்க உள்ளே வாங்க' எங்களை காத்திருக்க சொன்ன மப்டி போலீஸ்  வெளிப்பட்டு எங்களை அழைத்து கொண்டு போனார். ஒரு சிறிய மேசை, நாற்காலி. பிரிண்டர்.'எங்கள் ஸ்டேசன் ரொம்ப சிறியது; ஆனால் வேலை அதிகம்.அதனால் தான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வைக்க வேண்டியதாகி விட்டது; உட்காருங்கள்' என்றார்.

ஒருவர் தான் உட்கார முடியும்; நான் உட்கார்ந்து கொண்டேன்.

உடனே அவர் அங்க இருந்த ஒரு பெரிய மர பெட்டி மீது இருந்த பைல்களை எல்லாம் நகர்த்தி வைத்து கதிரையும் அர்ஜூனையும் உட்கார்ந்து கொள்ள சொன்னார். அவருக்கு அருகில் இருந்த இன்னொரு பெட்டியை திறந்து ஏதோ தீவிரமாக தேட ஆரம்பித்தார்.

அவர் குனிந்து கொண்டு தேட ஆரம்பித்தும், நான் இன்ஸ்பெக்டர் அறைப்பக்கம் நைசாக எட்டி பார்த்தேன். அங்கு ஹோட்டல் ரெசப்ஷனில் எல்லாம் போட்டு இருப்பார்களே, உயரமான வட்ட வடிவ மேசை; அந்த மாதிரி ஒரு மேசை, அதில் ஒரு கம்ப்யுட்டர்; இன்ஸ்பெக்டர்; எதிர்த்தாப்பல அந்த anticipated bail பற்றி பேசியவர்கள். அவர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஏதோ புள்ளிவிவரம் எல்லாம், கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அளவுக்கு கன்னடம் தெரியாததால் என்ன பேசினார் என்று தெரிய வில்லை.

இதற்குள் இங்கு நம்மிடம் பேசிக்கொண்டு இருந்தவர், அவர் தேடி கொண்டு இருந்த பைல் காணவில்லை என்பதை கண்டு பிடித்து, யாரிடமோ போனில் பேசி விட்டு "குமார் பைல் எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாராம்; அதனால் இப்போது உங்கள் வேலை முடியாது" என்ற மிக பெரிய உண்மையை எடுத்து உரைத்தார்.

'சரிங்க ரொம்ப நன்றி' என்று சொல்லிவிட்டு நாங்களும் நாங்கள் கிளம்பி விட்டோம்...

பெஞ்சில் என்னோடு உட்கார்ந்து இருந்த பெண்ணும் அவருடைய பையனும், அந்த ஆப்ரிக்க இளைஞனும் தங்களில் யாரை அடுத்து கூப்பிடுவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.